Monday 18 July 2016

Monday Motivation

24X7  உற்சாகமாக  இருக்கலாமா?! 

'ன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் நானா செதுக்குனது’ என பன்ச் அடிக்கும் பலரும், பல நொடிகளை, நாட்களை உபயோகமாகப் பயன்படுத்தாமல்தான் இருக்கிறோம். உபயோகமாகச் செலவழிக்கப்படும் இந்த நிமிடம், அடுத்த நிமிடத்தைப் பயனுள்ளதாக்குகிறது. ஒரு நாளில் 24 மணி நேரம் என ஒரு வாரத்தில் 168 மணி நேரம் நம் கையில் இருக்கிறது. இவற்றை எப்படி சிறப்பாக, செயல்திறனோடு செலவழிப்பது? 

இந்த 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்; இல்லையென்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது மருத்துவ  ஆய்வு. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். இப்போது உங்களிடம் மீதமுள்ளது 119 மணி நேரம். 

நீங்கள் ஏதோ ஓர் இடத்தில் வேலை செய்பவராக இருந்தால், ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 56 மணி நேரம் வேலை செய்கிறீர்கள். நம்மில் பலர் புத்திசாலித்தனமாக யோசித்து, "வார இறுதி நாட்கள் எனக்கு விடுமுறைதானே.. அதில் என்ன நான் வேலை செய்கிறேன்!" என்று கூறுவீர்கள். ஆனால், வார இறுதிகளிலும் மடிக்கணினி முன் அமர்ந்து எக்ஸ்.எல் ஃபைல்களையும், பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும் காபி கோப்பையோடு எடிட் செய்வது... வார இறுதிக்கான வேலை இல்லை. இதை சிலர் விரும்பிச் செய்வார்கள்... சிலர் வேறு வழியில்லாமல் செய்வார்கள். ஆக, எப்படியோ வாரத்தில் 56 மணி நேரம் வேலைக்காகப் போய்விட்டது. இப்போது மீதம் 63 மணி நேரம் கையில் இருக்கிறது.

   
இந்த 63 மணி நேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத அலுவலகப் பயணம், போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் பங்க் காத்திருப்பு போன்ற பல விஷயங்கள் ஒரு வாரத்தில் 13 மணி நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. குழந்தைகள் பாரமரிப்பு, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, உடற்பயிற்சி என 20 மணி நேரம் செலவாகிறது. இது போக, நாளொன்றுக்கு ’idle' எனப்படும் அமைதி மனநிலையில் (சும்மா இருக்கிறதைத்தான் அப்படிச் சொல்றோம் மக்களே) ஒரு நாளைக்கு 1 மணி நேரத்தைச் செலவழிக்கிறோம். இதனை நாம் மொத்தமாகச்  செலவழிப்பதில்லை. ஒரு மணி நேர இடைவெளியில் 10 நிமிடம்,  5 நிமிடம் என செலவாவது ஒரு வாரத்தில் 7 மணி நேரமாக உருவெடுக்கிறது.
ஆக, இப்படியெல்லாம் நமக்காக, பிறருக்காக, அலுவலகத்துக்காக என செலவழித்த பிறகு... நமக்கே நமக்கென்று  கையில் முழுமையாக 23 மணி நேரம் மீதமிருக்கிறது. இதைத் திட்டமிட்டுச் செலவழித்து, மனதில் புத்துணர்ச்சி ஏற்றிக் கொள்ளாமல்தான், ‘நேரமே பத்தல...’ என்று அலுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த 23 மணி நேரம் கிட்டதட்ட ஒரு முழு நாள். இந்த முழு நாளில் நாம் செய்யும் செயல்கள், வாரத்தின் மற்ற 6 நாட்களுக்குமான சார்ஜ் ஏற்றிக் கொடுக்கும். ஆனால், அதை அப்படி பயனுள்ளதாக ஆக்காமல், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் உலாவல், சம்மந்தமில்லா செயல்கள் என வீணடிக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் எனது நோட்டிஃபிகேஷன் பார்க்க செல்கிறேன்; அல்லது ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யச் செல்கிறேன் என்று களமிறங்கினால், நம்மையறியாமலே, கையிலிருக்கும் 23 மணி நேரத்தில் 14 மணி நேரத்தை செலவழித்துவிடுகிறோம். மீதமுள்ளது 9 மணி நேரம். சினிமா, சீரியல், வார இறுதி விண்டோ ஷாப்பிங் ஆகியவை போட்டி போட்டு அதைக் கபளீகரம் செய்துவிடும்.
எல்லாம் சரிதான்... நேரத்தை எப்படிதான் நம்ம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது? சுயக்கட்டுப்பாடு மிக முக்கியம். அதோடு பின்வரும் சங்கதிகளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..!
1. உங்கள் வேலை நேரமான 56 மணி நேரத்திலேயே, அடுத்த வாரத்துக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் வார இறுதிகளை அதற்காக காவு கொடுக்காதீர்கள். உங்கள் பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும், மடிக்கணினியையும் தள்ளி வையுங்கள். குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுங்கள். அது ஒரு வித அமைதியான சூழலையும் அடுத்த வாரத்திற்கான புத்துணர்ச்சியையும் தரும். 

2. சமூக வலைத்தள உலாவல் உங்களை ஆக்ரமிக்கும் 14 மணி நேரத்தைக் குறைக்க முயற்சியுங்கள். அருகில் இருப்பவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது.. 

3. உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அந்த நேரத்தை மூலதனமாக்குங்கள். ஒரு மொழி, நடனம், இசைக் கருவி மீட்டல் என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால், உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 168 மணிநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையாவது ஆற அமர நிதானமாகத் திட்டமிடுங்கள்.

4. ரிலாக்ஸ் நேரம் என நீங்கள் செலவு செய்வது உங்களை சோர்வடைய  செய்யும் விஷயமாக இருக்க கூடாது. ’பீச்சுக்கு போனேன் ...அசதியா இருக்கு’,  ‘ஷாப்பிங் சென்றதால் கால் வலிக்கிறது’ என்று கூறாமல், உங்களைப் புத்துணர்ச்சி அளிக்கும் ரிலாக்ஸ் விஷயங்களைத் தேடுங்கள்.

5. இன்றைய தலைமுறை உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், 'விர்ச்சுவல்' வருகிறது என்கிறது சமூக ஆய்வு ஒன்று. ஆக, உங்களது செயல்பாடுகள் போக, மீதமுள்ள நேரத்தைக் கட்டாயம் குடும்பத்தோடு ஆனந்தமாகக் கொண்டாடுங்கள்.

உங்கள் நேரம் அதிக மதிப்புமிக்கது. அதனைச் சரியாகப் பயன்படுத்துங்கள். இன்னமும் உங்களுக்கு ஒரு வாரத்தின் 168 மணி நேரம் போதவில்லை என்று தோன்றினால், உங்களது 1 மணி நேரத்தைக் கூட உங்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியாது. ஏனென்றால், உங்கள் 24*7 உங்கள் கையில்! 
-ச.ஸ்ரீராம்                                                                      நன்றி - விகடன் 

No comments:

Post a Comment