" மகரிஷி அவர்களுடன் " பதிவு கடந்த ஜூன் மாதம் பதிவிட முடியாமல் போய்விட்டது. அதனை ஈடு கட்டும்விதமாக இந்த மாதம் குறைந்தது மூன்று பதிவுகள் நிச்சயம் தருகிறேன்.
இன்று எங்கள் அன்பு மகன் ஸ்ரீராம் பிறந்த தினம்.
அவனுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே மகரிஷி பற்றியும், மனவளக்கலை பயிற்சிகள் பற்றியும் மிக ஆர்வத்துடன் தெரிந்து கொள்வான். எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் பேராசிரிய பெருமக்கள் அமரர் பொன்னம்பல ஐயா, உலகநாதன் ஐயா மற்றும் தற்போது சென்னையில் வசித்துவரும் என்னுடைய ஆசான் Dr நாகராசன் அவர்கள் எனப் பலரும் எங்களுடன் விவாதிப்பதைக் கூர்ந்து கவனிப்பான்.
அவனுக்கு நான்கு வயதிருக்கும்போது சென்னை தலைமை மன்றத்திற்கு சாமியைச் சந்திக்க அழைத்துச் சென்றிருந்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். விடைபெறும்போது மாலாவும், நானும் சாமி காலில் விழுந்து ஆசிகள் பெற்றோம். அங்கிருந்த ஒருவர் ஸ்ரீராமைப் பார்த்து சாமி காலில் விழுந்து ஆசிகள் பெறச் சொன்னார். உடனே ஸ்ரீராம் அவரிடம் " சாமி தன் காலில் யாரும் விழுந்து வணங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் தெரியுமா? " எனச் சொல்ல சாமிக்கு ஒரே மகிழ்ச்சி. " என் பேச்சைக் கேட்க எனக்கு ஒருத்தர் கிடைச்சிட்டாரு " ன்னு நகைச்சுவையாகச் சொல்லி " எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக வருவான் " என மனங்குளிர வாழ்த்தினார்கள்.
மாலா ஸ்ரீலங்கா சென்றிந்தபோது ஸ்ரீராமும் கூட சென்று தொண்டாற்றியுள்ளான்.
( கொழும்பு நகரில் மனவளக்கலை நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பேசியதில் ஒரு பகுதி படிக்க இங்கே சொடுக்கவும் )
அவன் B Tech முடித்தபிறகு வேலையில் சேரும் முன் ஒரு மாதத்திற்கும் மேலாக ஆழியாறில் தங்கியிருந்து தினமும் சாமியிடம் பேசும் நல்வாய்ப்பு பெற்றவன். சாமியை நாங்கள் சந்த்தித்தபோது " இவன் பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் " என புகழ்ந்தபோது இவனைப் பெற்ற புண்ணியம் அடைந்த நெகிழ்ச்சி.
தற்போது அமெரிக்க தலைநகர் அருகே உள்ள முருகன் கோவிலில் மாதமொருமுறை நடைபெறும் தவ மையத்தில் தொண்டாற்றி வருகிறான். இது தவிர நாள்தோறும் அங்கு இணைய வழியில் நடைபெறும் தவம், சிந்தனை உரை இவைகளிலும் பங்கேற்று வருகிறான்.
No comments:
Post a Comment