Friday 30 September 2022

உண்மையான மகிழ்ச்சியே நிம்மதி

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.

பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக-சவுகரியங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான்.

நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம் வந்தான்.

அவரிடம் தன் குறையைச் சொன்னான்.

“ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க என்ன பிரச்னை?” என்று ஞானி கேட்டார்.

“எனக்கு, உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை வாங்க முடியுமா?” என்றான் செல்வந்தன்.

ஞானி அவனை, கால்பந்து விளையாட்டு பார்க்க அழைத்துச் சென்றார்.

மைதானத்தை அடைந்து பந்தயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

இரு அணிகளும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர்.

ஞானி, “எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்....!!!

ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு விளையாடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது” என்றார்.

ஆனால், பணக்காரன் கண்களிலோ பந்து உதைபட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவதுதான் விழுந்தது.

அவன் ஞானியிடம் சொன்னான்: “இந்தப் பந்தைப் போன்றது தான் என் நிலையும்…

வருமான வரிக்காரர்கள், தொழிலாளிகள், பிள்ளைகள் என்று நாலா பக்கமும் இடிதான்....!!!”

“சரி, இதுவேண்டாம் வேறு இடத்துக்குப் போகலாம்” என்று ஞானி ஒரு சங்கீத கச்சேரிக்கு அவனை அழைத்துபோனார்.

அங்கு ஒரு புல்லாங்குழல் வித்துவான் ஆனந்தமாக இசை மழை பொழிந்து கொண்டிருந்தார்.

அவர்கள் அமைதியாக இசையை ரசித்து மகிழ்ந்தனர்.

மேடையின் பின்னணியில் கிருஷ்ண பகவானின் குழலூதும் விக்ரகம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வழியில் ஞானி கேட்டார்: “பந்துக்கும் குழலுக்கும் என்ன வேற்றுமை...???”

“இதென்ன கேள்வி...??? ஒன்று இசைக்கருவி, மற்றொன்று விளையாட்டுச் சாதனம்....!!!” என்றான் தனவான்.

ஞானி விளக்கினார்: “இவை இரண்டுக்கும் தேவைப்படுவது காற்று.

பந்து, தான் வாங்கிய காற்றைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. அதனால்தான் அது உதைபடுகிறது.

புல்லாங்குழல், உள்வாங்கிய காற்றை தகுந்த இடத்தில், தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது.

அதனால், அற்புதமான இசை உருவாகிறது.

மேலும் இறைவனின் கைகளில் தவழும் பாக்கியமும் அதற்கு கிடைக்கிறது.

இப்போது புரிகிறதா...????” என்று கேட்டார் ஞானி.

பணத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்வதால் நிறைவு கிடைக்காது.

அதைப் பாத்திரமறிந்து, தேவையறிந்து வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்கும் என்று தெளிவடைந்தான் செல்வந்தன

நீங்கள் யார் ?


1."நீங்கள் மகத்தானவர்" என்பதைத்தான் இந்த பிரபஞ்சம் நம்பிக் கொண்டிருக்கிறது.

2."நீங்கள் அன்பானவர்" என்பதால்தான்
முன்பின் தெரியாத ஒரு குழந்தை கூட உங்களை கண்டவுடன் சிரிக்கிறது.

3."நீங்கள் நம்பிக்கை மிகுந்தவர்" என்பதால்தான் மீண்டும் மூச்சை வெளிவிடுவீர்கள் என்று
சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

4."நீங்கள்  வலிமையானவர்" என்பதால்தான்
பல இன்னல்கள் தரப்பட்டு உங்கள் திறமை பாராட்டப்படுகிறது.

5."நீங்கள் புனிதமானவர்" என்பதால்தான் உங்கள் பயணமும் மற்றவர்களின் பயணமும் பல போக்குவரத்து பயணங்களில் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது.

6."நீங்கள் சாதனைச் செய்ய பிறந்தவர்"         என்பதால்தான் ஒவ்வொரு விடியலும் வாய்ப்பை வழங்கி வருகிறது.

7."நீங்கள் சுறுசுறுப்பானவர்"
     என்பதால்தான் பசி ஏற்பட்டுக்
      கொண்டே இருக்கிறது.

8."நீங்கள் பாசமானவர்"என்பதால்தான்,
    உறவினர்களின் அழைப்பிதழ்கள்   தேடிப்பிடித்து உங்கள் இல்லம் தேடி
வருகிறது.

9."நீங்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்"என்பதால்தான் தினசரிகளைப்
படிக்கிறீர்கள்.

10."நீங்கள் காலத்திற்கேற்ப மாறுபவர்"என்பதால்தான் fb, whatsapp என தொடர்பு இருக்கிறது.

11."நீங்கள் பல்சுவைமிக்கவர்" என்பதால்தான்
புதியதாகத் தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.

12."நீங்கள் பொறுமை  மிக்கவர்"
என்பதால்தான், திருமண வாழ்க்கையை
விரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

13."நீங்கள் மனிதநேயமிக்கவர்"
என்பதால்தான், உங்களிடம் அமைதி குடி
கொண்டிருக்கிறது.

14."நீங்கள் தியாகசீலர்"என்பதால்தான்,
உங்களின் குழந்தைகளின் தேவையையும், உங்களைவிட முதியோரின் தேவையையும் பூர்த்தி செய்து நேரத்தை தந்து கொண்டிருக்கிறீர்கள்.

15."நீங்கள் நன்றியுடையவர்" என்பதால்தான், பிறர் உங்களைப் பாராட்டுவதற்கு முன்பு, அவரைப் பாராட்ட
முற்படுகிறீர்கள்.

16."நீங்கள் சிறந்த சிந்தனையாளர்"என்பதால்தான், படித்ததை எல்லாம் நம்பாமல், கேட்டதை எல்லாம் சொல்லாமல், கவனித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

17."நீங்கள் சிறந்த நண்பர்"... என்பதால்தான், நான் எழுதியதைப் படித்து
தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், சரியென்றால் தட்டிக்கொடுக்கவும் தயாராகிவிட்டீர்கள்...!

Thursday 29 September 2022

ஜோக்கு

 

ஜேப்ஸ் அரபு நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த வேலு கேட்டார்.. " மணி என்ன ஐயா?"

ஜேப்ஸ் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு..

"ஆறாக 10 நிமிடம் இருக்கு".

"வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?"

"நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் 
ஜேப்ஸ். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த மாசிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த வேலு அசந்து போய் விட்டார்.

"நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"

"இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு"

"நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க"

"இல்லை ஐயா"

"ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்"

"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை"

"சரி. ஒரே விலை 15000'

"சொன்னா கேளுங்க.."

"ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க"

"இல்ல...."

"ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?"

"அட உண்மையாவே இது இன்னும் முழுசா....."

"ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க்? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளவு விரும்பி கேட்கிறேன்"

ஜேப்ஸ் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் 
ஜேப்ஸ் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய வேலு ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.

"ஹலோ ஒரு நிமிசம்" என்று ஜேப்ஸ் கூப்பிட்டார் .

கடிகாரத்தை வாங்கிய வேலு, "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப ஜேப்ஸ் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்....

"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"

காலமறிதல் - 3

 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


கல் நேரத்தில் காக்கை கூகையைக் கண்டால், கொத்தித் துரத்தி விடுகிறது. பகல் நேரத்தில் கூகைக்குக் கண் பார்வை குறைவு. ஆந்தையும் கூகையும் இரவுப் பறவைகள். இரவில் அவற்றுக்கு நன்றாகக் கண்தெரியும். காக்கை பகற் பறவை. இரவில் அதற்குப் பார்வை சக்தி குறைவு.

கூகையின் பலவீனப் பொழுது, பகல் என்பதால் அதைப் பயன்படுத்தி காக்கை கூகையை வெல்ல முடிகிறது.

அது போல அரசர்க்கும் தகுந்த காலம் வேண்டும். எதிரியின் பலவீனமான காலம் தனக்கு சாதகமான காலம். அதைப் பயன்படுத்தினால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அத்தகு காலத்தை எதிர்பார்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

தகாத காலத்தில் போர் தொடுத்து, பாலைவனப் பகுதிகளில் குடிக்க நீரும், உணவும் கிடைக்காமல், மாண்டு மடிந்த படைகளை வரலாறு காட்டுகிறது. கொட்டும் பனியில் மாட்டிக் கொண்டு ஹிட்லரின் படைகள் ரஷ்யப் பகுதியில் பேரிழப்பும், படுதோல்வியும் கண்டது. காலம் பார்ப்பது என்பது பருவம் பார்ப்பதும் ஆகும். படை எடுக்கும் மன்னவர்கள் தகுந்த காலத்தையும், சகுனத்தையும் உணர்ந்தே போர் தொடுத்தார்கள் என்பதை சங்க இலக்கியப் பாடல்களும் காட்டுகின்றன.

“வாட்கோள்” என்பது புற இலக்கியங்களில் ஒரு தனித்துறை. கொற்றவையை வணங்கி, வாளுக்குப் பூஜைசெய்து, சுபவேளையில் அந்த வாளைக் கோவிலிலிருந்து எடுத்துப் புறப்படுவதே வாட்கோள் என்பதாகும்.

சித்தர்களின் இலக்கியத்தில் நாசியில் ஓடும் சரம் கணக்கிட்டு, அதற்கேற்ற ஆயுதத்தை எடுத்துப் போர் செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இருக்கிறது. சரத்திற்கு ஏற்றபடி எந்தத் திசையில் நின்று போர் செய்ய வேண்டும் என்று கூடக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இக்கருத்துகளை எல்லாம் கூட, இக்குறட் கருத்துடன் இணைத்து வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday 28 September 2022

படைத்தல்

 

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார்.
அப்போது ஒரு விஞ்ஞானி வந்து, "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை,ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் எங்களுக்கு கற்றுத் தந்து  விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்த படைப்புத் தொழிலை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.
"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.
"அதாவது வெறும் மண்ணிலிருந்து உம் சாயலில் ஒரு உருவைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.
அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம். உடனே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவை செய்யத் துவங்கினாராம்.
அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ தயாரித்த உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.
(இணையத்தில் இரசித்த நல்ல நகைச்சுவை)

கொட்டைப் பாக்கு

ப‌ழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்ப‍தை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பக்க‍விளைவுகளும் பின்விளைவுகளும் இல்லாத மருந்தாக பயன்படுத்தி வந்திருப்ப‍து ஆச்ச‍ரியப்பட வேண்டிய விஷயம்.

அந்த வரிசையில் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன்கூடவரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டுவைத்தியம்; வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறுசிறு துண்டுகளாக்கி , சாப்பாட்டிற்குப்பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும். ஆனால் கடித்து அதனை துண்டாக்க‍க் கூடாது; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பிவிடுங்கள். பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ்நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது. இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.


Tuesday 27 September 2022

புரட்டாசி மீம்ஸ்















 

ஆழியாரில் மூன்று நாட்கள்

கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை ஆழியாரில் தங்கியிருந்தபோது நண்பர்கள் நிறையபேர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.திருச்சி மண்டலத்தின் கடலோரம் இருக்கும் மணமேல்குடி அறிவுத்  திருக்கோயிலுக்கான திறப்பு விழா பற்றி தலைவர் பத்மஸ்ரீ SKM ஐயாவிடம் பேசி 2023 ம் ஆண்டு பிப்ரவரியில் தேதி வாங்கினோம். இக்கோயில் திருச்சி மண்டலத்தின் 13 வது கோயிலாகும்.









உலக சமுதாய சேவா சங்க கூட்டங்கள்

ஆழியாரில் கடந்த செப். 23, 24 & 25 தேதிகளில் நடைபெற்ற ஆலோசனைக்கு கூட்டம் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு & பொதுக் குழு கூட்டங்களில் கூடுதல் இயக்குனர் என்ற முறையில்
 கலந்து கொண்டேன்.
தலைவர் பத்மஸ்ரீ SKM மயிலானந்தன் அவர்கள் தலைமை பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.




 








Monday 26 September 2022

காலமறிதல் - 2


 

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.



ன்கிறார் அடுத்த குறளில். பருவத்திற்குத் தக்கபடி நடந்து கொள்வதே, செல்வம் தம்மை விட்டுப் போகாமல் கட்டி வைக்கும் கயிறு என்பது குறள் கூறும் கருத்து.

காலமறிந்து செய்யாத செயல் பொருள் நஷ்டத்திற்கு வழிவகுக்கும். காலம் என்பது, ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவனால் அளந்து கொடுக்கப்பட்டுள்ளது.

காலமே, விதையிலிருந்து மரத்தை உருவி எடுக்கிறது. காலமே காயைக் கனிய வைக்கிறது. இலையைச் சருகாக்குகிறது. அரும்பை மலராக்குகிறது.

கடலில் வாழும் ஆமைகள் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் கடற்கரைக்கு வந்து தங்கள் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. இவ்விரண்டு தினங்களிலும் அலைகள் கடற்கரையில் அதிக தூரங்களை நனைத்து வைத்து விடுகின்றன. அலைகளில் நனைந்த மணற்பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகள் அடுத்து அடுத்து வரும் நாள்களில் அலைகளால் நனைவதில்லை. அவை அலையோசை கேட்கும் தூரத்தில், வெயில் காய்ந்து கிடக்கும் மண்ணில் கீழே குஞ்சுகளாகப் பொரிந்து விடுகின்றன.

மீண்டும் அமாவாசையோ, பௌர்ணமியோ நெருங்கும் போது, கடல் அலைகள் அக்குஞ்சுகளைக் கூப்பிட்டுப் போக வருவதுபோல் அங்கு வருகின்றன. ஆமைக் குஞ்சுகளும் எளிதில் கடலை அடைகின்றன.

முட்டையிடுவதற்கு ஆமைகூட தகுந்த காலத்தைக் கண்டுபிடித்துச் செல்லமுடிகிறது. மனிதன்தான் கால நேரம் தவறி சில செயல்களைச் செய்து விடுகிறான். அதன் விளைவுகளையும் அனுபவிக்கிறான். பருவத்தோடு காரிய எதையுமே செய்ய வேண்டும் என்று சொன்னாலும் பலருக்கும் புரிவதில்லை.

வாழ்க்கைக்குத் தேவையான பணம், பதவி, எல்லாம் கிடைத்த பிறகுதான், திருமணம் செய்வது என்ற எண்ணம் இன்று பலருக்கும் வந்துவிட்டது. வாலிபம் விடைபெறும் போது கல்யாணம் செய்துவிட்டு, இன்பத்தைத் தேடி துன்பத்தில் தவிக்கிறவர்கள் எத்தனை எத்தனை பேர்? பருவத்தே செய்யாத பயிர்கள், அறுவடைக் காலத்தில் அதன் விளைவைக் காட்டி விடுகின்றன.

நன்றி - இணையம் 

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 32

 அருவிக் குளியல் 

குரங்கு அருவி - தற்போது கவியருவி 


மூன்று  ஆண்டுகள் கழித்து குரங்கருவியில் குளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.






செப்டம்பர் 23 ம்  தேதி காலையில்  மணிக்கு அருவிக்குச் சென்றபோது நாங்கள் ஐந்து பேர்கள் மட்டும்தான். வேறு யாரும் இல்லை. தண்ணீர் அருவியில் அளவாகக் கொட்டிக்கொண்டிருந்தது.  நிமிடங்கள் ஆனந்தமாகக் குளியல் போட்டோம்.

ஒரு பகுதியில் மிக வேகமாக நீர் காட்டிக்கொண்டிருந்தது. அங்கு தலை, முதுகைக் காட்டியபோது சுளீரென சாட்டையில் அடி வாங்கிய உணர்வு. சிலநிமிடங்களில் அங்கிருந்து விலகி நடு பகுதில் மிதமான வேகத்தில் கொட்டிய நீரில் அதிக நேரம் குளித்தேன். உடம்பெல்லாம் யாரோ பிடித்து விட்ட உணர்வு. பிறகு அருவியில் ஆரம்பப் பகுதியில் உட்கார்ந்து பத்து நிமிடங்கள்.


சுற்றுலாப் பயணிகள் சிலர் வரவே நாங்கள் உடை மாற்றி அங்கிருந்து கிளம்பினோம்.

முதன்முதல் அருவியில் குளித்தது 50 ஆண்டுகளுக்கு முன்.

பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவி - பத்தடி உயரத்திலிருந்து வீழும் நீரில் குளித்த அனுபவம் - தலைமுடியெல்லாம் பஞ்சாக உலர்ந்துபோனது இன்னும் ஞாபகம் உள்ளது. நடிகர் S S ராஜேந்திரன் எங்களுடன் குளித்தது, நாங்கள் கொண்டு சென்ற எண்ணையில் அவர் மசாஜ் செய்து குளித்தது இதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

பிறகு குற்றால அருவியில் குளிக்க சென்றபோது அதிகக் கூட்டம். எனவே இரவு ஒரு மணிக்கு குளிக்கச் சென்றோம். ஒரு மணிநேரம் குளித்த பிறகு ஏற்பட்ட அகோர பசி தீர டஜன் கணக்கில் இட்லி சாப்பிட்டது மலரும் நினைவுகளாக வந்து போயின.

கர்நாடகாவில் உள்ள ஜோக் அருவிகளின் அடிவாரத்திற்கு இறங்கி அங்கு ஓடிவரும் நீரில் குளித்தது, அங்கு கிடைத்த அன்னாசி பழங்களை உண்டு மகிழ்ந்தது மகிழ்ச்சியான அனுபவங்கள்.

நாகர்கோயில் அருகில் உள்ள திற்பரப்பு  அருவியில் குளிக்க ஆசைப்பட்டும் மாற்று உடைகள் எடுத்து செல்லாததால் அந்த அருவியில் குளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

குரங்கருவியில் பலமுறை குளிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு சிலமுறை அதிக நீர்வரத்து காரணமாக தடை விதிக்கப்பட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவுக்கு வருகின்றது.

குழந்தைகள் - கலீல் கிப்ரான்


ங்கள் குழந்தைகள்

உங்கள் குழந்தைகள் அல்ல

அவர்கள்




உங்கள் வாழ்க்கைக்கான ஏக்கத்தின்

புதல்வர்களும் புதல்விகளும்;

அவர்கள்

உங்கள் மூலம் இந்த உலகிற்கு

வந்துள்ளார்களே தவிர

உங்களில் இருந்து அல்ல

அவர்கள்

உங்களுடனேயே இருந்தாலும்

அவர்கள்

உங்களுடையவர்கள் அல்ல.

அவர்களுக்கு

உங்கள் அன்பை வழங்கலாமே தவிர

உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது.

ஏனெனில்

அவர்கள் அவர்களுக்கான

சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின்

தேகங்களுக்கு ஒரு இல்லத்தை

நீங்கள் வழங்கி இருக்கலாம் ;

ஆன்மாக்களுக்கு அல்ல.

ஏனெனில்

அவர்களின் ஆன்மா

கற்பனையிலும் உங்களால்

பிரவேசிக்க முடியாத

நாளை எனும் வீட்டினில்

ஜொலிக்கிறது.

நீங்கள்

அவர்களை போன்றிருக்க முயற்சிக்கலாம்;


ஆனால் உங்களை போன்று அவர்களை

ஆக்கிட முயற்சிக்காதீர்கள்.

ஏனெனில்

வாழ்க்கை என்பது

பின்னோக்கி செல்வதுமல்ல;

நேற்றைய தினத்தோடு

தேங்கிநின்று விடுவதுமல்ல

Saturday 24 September 2022

நான் யார்

லகத்தில் பிறந்த அத்தனை ஜீவன்களும் சுகமாய் இருக்கவே விரும்புகின்றன. ஒவ்வொரு உயிரும் தன்னிடத்திலேயே மிகப் பிரியமாக இருக்கிறது. இந்தப் பிரியம் ஒரு சுகம். அந்தச் சுகத்தை நித்திரையின்போது மனம் நன்றாக அனுபவிக்கிறது. தனக்குள் ஒடுங்கி தன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நன்றாகத் தூங்கினேன் என்கிற சந்தோஷத்தோடு எழுந்திருக்கிறது. விழித்திருக்கிற நிலையில் தன்னில் தான் ஒடுங்குதல், தன்னை அறிதல் என்பது நிகழ வேண்டும்.

'நான் யார்' என்கிற கேள்வியைக் கேட்டுப் பதில் பெறுவதே இதற்கு எளிமையான வழி. உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்... 'நான் யார்? நான் யார்? உடம்பா? உடம்பு எனில், தூங்கும்போது இந்த உடம்பு எங்கே இருந்தது? அதைப் பற்றிய அறிவு எங்கே இருந்தது? வேறு ஏதோ ஒன்று தூங்கி, வேறு ஏதோ ஒன்று ஒடுங்கி உள்ளே இருந்ததல்லவா! உடம்பைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்ததல்லவா?

அப்படியானால் 'நான்' என்பது உடம்பல்ல. எனில், புலன்களாலும், புலன்களின் அனுபவத்தாலும் மூளையின் ஞாபக சக்தியாலும் ஏற்பட்ட மனம்தான் 'நானா'? மனம் என்ன செய்யும்? ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கும். தூங்கும்போது கனவு காணும்; கனவில் சண்டை போடும்; சந்தோஷப் படும்; ஏறும்; இறங்கும்; அலையும். ஆனால், கனவில்லாத நேரமும் இருந்ததே! கனவில்லாத தூக்கத்தைதானே நல்ல தூக்கம் என்கிறோம்; ஆனந்தமாகத் தூங்கினோம் என்று சொல் கிறோம். அப்படியானால், விழித்திருக்கும் போது அலையும் மனமும், கனவின்போது அலையும் மனமும் நானல்ல. வேறு ஏதோ ஒன்று ஆனந்தமாகத் தூங்கியது. அது எது?

'நான்' யாரென்று தெரியாமல் விழித்து நிற்கிறேனே... அது நானா? இல்லை; அதுவும் நீ இல்லை. அது இல்லை நான்... இது இல்லை நான்... என்று ஒவ்வொன்றாக, எதை நான் என்று நினைத்திருக்கிறோமோ அதையெல்லாம் புறந்தள்ளி, தள்ளமுடியாமல் எது மீதி நிற்கிறதோ, அதுவே 'நான்'.

உன் அறிவால், உன் அனுபவத்தால் இந்த உலகத்தைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண் டிருக்கிறாய். இந்த உலகம் நல்லது என்றும், கெட்டது என்றும் நீயாக ஒரு முடிவுக்கு வருகிறாய். உண்மை என்ன என்று உன்னால் பார்க்க முடியவில்லை. எந்த விஷயத்திலும் அதன் உண்மையை, அதன் சத்தியத்தை உன்னால் அறியமுடிவதில்லை.

உதாரணமாக, இரவில் ஒரு தாம்புக் கயிற்றைப் பாம்பு என்று நினைத்துப் பதறி ஓடி அலைகிறாய். உன் ஆத்ம நண்பன் உன்னை நிலைநிறுத்தி, அதைப் பார் என்று சொல்லி, தன் கையால் அதைத் தூக்கி, கயிறு என்று காண்பித்த பிறகு, 'பாம்பு' உடனே காணாமல் போய், 'அட, கயிறு!' என்ற நிம்மதி தொற்றிக்கொள்கிறது. எல்லாம் உனது கற்பனை!

நன்றி: பாலகுமாரன் - "சக்திவிகடன்"

காலமறிதல் - 1


ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. காலம் அறிந்து பயிர்செய்யும் போது, அப்பயிரை வளர்க்க இயற்கையே உதவி செய்துவிடும்.

பயிர் செய்வதற்கு மட்டுமல்ல, போர் செய்வதற்கும் வணிகம் செய்வதற்கும், பிற செயல்களைச் செய்வதற்கும் காலம் அறிந்து செய்வது மிக முக்கியமாகும்.

“கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்; காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்” என்று கவிஞர் வாலி ஒருபாடல் எழுதியிருக்கிறார். காலம் அறியாது செயல் செய்கிறவர்களின் சோகப்பாடல் அது. எந்தச் செயலையும் காலமறிந்து செய்வது மிக முக்கியம் என்பதை வலியுறுத்தவே 

காலமறிதல் 

என்னும் தலைப்பில் பத்துக் குறள்களை எழுதியிருக்கிறார் வள்ளுவர்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பகல் நேரத்தில் காக்கை கூகையைக் கண்டால், கொத்தித் துரத்தி விடுகிறது. பகல் நேரத்தில் கூகைக்குக் கண் பார்வை குறைவு. ஆந்தையும் கூகையும் இரவுப் பறவைகள். இரவில் அவற்றுக்கு நன்றாகக் கண்தெரியும். காக்கை பகற் பறவை. இரவில் அதற்குப் பார்வை சக்தி குறைவு.

கூகையின் பலவீனப் பொழுது, பகல் என்பதால் அதைப் பயன்படுத்தி காக்கை கூகையை வெல்ல முடிகிறது.

அது போல அரசர்க்கும் தகுந்த காலம் வேண்டும். எதிரியின் பலவீனமான காலம் தனக்கு சாதகமான காலம். அதைப் பயன்படுத்தினால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அத்தகு காலத்தை எதிர்பார்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

தகாத காலத்தில் போர் தொடுத்து, பாலைவனப் பகுதிகளில் குடிக்க நீரும், உணவும் கிடைக்காமல், மாண்டு மடிந்த படைகளை வரலாறு காட்டுகிறது. கொட்டும் பனியில் மாட்டிக் கொண்டு ஹிட்லரின் படைகள் ரஷ்யப் பகுதியில் பேரிழப்பும், படுதோல்வியும் கண்டது. காலம் பார்ப்பது என்பது பருவம் பார்ப்பதும் ஆகும். படை எடுக்கும் மன்னவர்கள் தகுந்த காலத்தையும், சகுனத்தையும் உணர்ந்தே போர் தொடுத்தார்கள் என்பதை சங்க இலக்கியப் பாடல்களும் காட்டுகின்றன.

“வாட்கோள்” என்பது புற இலக்கியங்களில் ஒரு தனித்துறை. கொற்றவையை வணங்கி, வாளுக்குப் பூஜைசெய்து, சுபவேளையில் அந்த வாளைக் கோவிலிலிருந்து எடுத்துப் புறப்படுவதே வாட்கோள் என்பதாகும்.

சித்தர்களின் இலக்கியத்தில் நாசியில் ஓடும் சரம் கணக்கிட்டு, அதற்கேற்ற ஆயுதத்தை எடுத்துப் போர் செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இருக்கிறது. சரத்திற்கு ஏற்றபடி எந்தத் திசையில் நின்று போர் செய்ய வேண்டும் என்று கூடக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இக்கருத்துகளை எல்லாம் கூட, இக்குறட் கருத்துடன் இணைத்து வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


நன்றி -  இணையம்

Friday 23 September 2022

விழிப்புணர்வு - புத்தர்

ஒருநாள் புத்தர் தனது மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.

மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவன் புதியவன்; ஒரு நாட்டின் மன்னன். தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாதவன். உடல் நெளிந்தும், கால்களை மாற்றியும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தான் படும் சிரமத்தை, புத்தர் அறிந்து விடக் கூடாதென்பதற்காக, அதை மறைக்கவும் முயற்ச்சித்தான்.

 இதனை ஜாடையாக புத்தரும் கவனித்தார். அவர் மற்றொன்றையும் பார்த்தார். அவனுடைய கால் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அந்த ஆட்டம் அவனை அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார்.

பின் தனது பேச்சை நிறுத்தினார்.

“உன் காலின் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தாயா?” என்று மன்னனைப் பார்த்து கேட்டார்.
மன்னன் அப்பொழுதுதான் தன் கால் கட்டை விரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.
அவன் பார்த்தவுடன் கட்டை விரலின் ஆட்டம் நின்று விட்டது.
அங்கிருந்த அனைவரும் “என்ன ஆச்சரியம்!” என்று வியந்தனர்.
“இப்பொழுது கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! ஏன் தெரியுமா?”

 அனைத்து மாணவர்களிடமிருந்து தனது கேள்விக்குப் பதிலை எதிர்பார்த்தார்.

ஒருவரிடமிருந்தும் பதில் வராமல் போகவே, அவரே பேச ஆரம்பித்தார். “அவன் தனது கால் விரலின் ஆட்டத்தை உற்றுப் பார்த்தவுடன் அதாவது விழிப்புணர்வுடன் (கவனத்துடன்) பார்த்தவுடன் கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! விழிப்புணர்வு மட்டும் இருந்தால் போதும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்!” என்றார் புத்தர்.