Monday, 31 August 2026
Sunday, 30 August 2026
மனைவி நல வேட்பு விழா
இன்று ஆகஸ்ட் 30, மனைவி நல வேட்பு விழா
மாலாவும், நானும் சென்ற ஆண்டுவரை மொத்தம் 36 தடவைகள் இந்த விழாவினை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் நடத்தியிருக்கின்றோம்.
சென்ற ஆண்டு மனைவி நல வேட்பு உறுதிமொழி சொல்லி அவள் தலையில் ரோஜா மலரை சூட்டும்போது மாலா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதாள். அவளால் அதற்கு பிறகு பேச முடியவில்லை. நானே நிகழ்ச்சியை முடித்து விட்டு பிறகு வீடு திரும்பினோம். வீட்டிற்கு வந்தபிறகு ஏன் இப்படி அழுதாய் எனக்கேட்டதற்கு " நான் உங்களுக்கு ஏதுமே செய்வதில்லை. என்னை ஓர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள். இவ்வளவிற்கும் நான் எப்படி நன்றி சொல்லி உங்களை பார்த்துக்கொள்ள போகிறேன் " என்றாள். "நாம் நடத்தப்போகும் நூறாவது விழா அன்று இதுபற்றி பேசலாம் " என்று கூறி அவளை சமாதானப்படுத்தினேன்.ஆனால் அவள் உள்ளுணர்விற்கு ஏதோ தெரிந்துள்ளது - இதுதான் கடைசி முறை என்று.
இன்று என்னை விழா நடத்த கூப்பிட்டனர் - "நான் வரவில்லை. மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டால் விழா வீணாகிவிடும் " எனக் கூறிவிட்டேன். எனினும் அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் பார்வையாளனாக கலந்துகொண்டேன்.இன்று முகூர்த்தநாள் என்பதால் நிறைய அன்பர்களுக்கு இன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய் விட்டது. சிறப்பு தம்பதியர்களில் இரு தம்பதியர் வர முடியவில்லை. விழா தொகுப்பாளர் என்னையே விழாவின் முக்கிய நிகழ்வுகளான காந்த பரிமாற்ற தவம் மற்றும் மலர், கனி பரிமாற்றத்தையும் நடத்தும்படி வேண்டினர். என்னுள் இருந்து என்னை இயக்கிக்கொண்டிருக்கும் மாலாதான் நிகழ்வினை நடத்தினாள் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தேன்.இன்றைய நிகழ்வில் எடுத்த போட்டோக்கள் -

























































