Monday 26 September 2022

காலமறிதல் - 2


 

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.



ன்கிறார் அடுத்த குறளில். பருவத்திற்குத் தக்கபடி நடந்து கொள்வதே, செல்வம் தம்மை விட்டுப் போகாமல் கட்டி வைக்கும் கயிறு என்பது குறள் கூறும் கருத்து.

காலமறிந்து செய்யாத செயல் பொருள் நஷ்டத்திற்கு வழிவகுக்கும். காலம் என்பது, ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவனால் அளந்து கொடுக்கப்பட்டுள்ளது.

காலமே, விதையிலிருந்து மரத்தை உருவி எடுக்கிறது. காலமே காயைக் கனிய வைக்கிறது. இலையைச் சருகாக்குகிறது. அரும்பை மலராக்குகிறது.

கடலில் வாழும் ஆமைகள் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் கடற்கரைக்கு வந்து தங்கள் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. இவ்விரண்டு தினங்களிலும் அலைகள் கடற்கரையில் அதிக தூரங்களை நனைத்து வைத்து விடுகின்றன. அலைகளில் நனைந்த மணற்பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகள் அடுத்து அடுத்து வரும் நாள்களில் அலைகளால் நனைவதில்லை. அவை அலையோசை கேட்கும் தூரத்தில், வெயில் காய்ந்து கிடக்கும் மண்ணில் கீழே குஞ்சுகளாகப் பொரிந்து விடுகின்றன.

மீண்டும் அமாவாசையோ, பௌர்ணமியோ நெருங்கும் போது, கடல் அலைகள் அக்குஞ்சுகளைக் கூப்பிட்டுப் போக வருவதுபோல் அங்கு வருகின்றன. ஆமைக் குஞ்சுகளும் எளிதில் கடலை அடைகின்றன.

முட்டையிடுவதற்கு ஆமைகூட தகுந்த காலத்தைக் கண்டுபிடித்துச் செல்லமுடிகிறது. மனிதன்தான் கால நேரம் தவறி சில செயல்களைச் செய்து விடுகிறான். அதன் விளைவுகளையும் அனுபவிக்கிறான். பருவத்தோடு காரிய எதையுமே செய்ய வேண்டும் என்று சொன்னாலும் பலருக்கும் புரிவதில்லை.

வாழ்க்கைக்குத் தேவையான பணம், பதவி, எல்லாம் கிடைத்த பிறகுதான், திருமணம் செய்வது என்ற எண்ணம் இன்று பலருக்கும் வந்துவிட்டது. வாலிபம் விடைபெறும் போது கல்யாணம் செய்துவிட்டு, இன்பத்தைத் தேடி துன்பத்தில் தவிக்கிறவர்கள் எத்தனை எத்தனை பேர்? பருவத்தே செய்யாத பயிர்கள், அறுவடைக் காலத்தில் அதன் விளைவைக் காட்டி விடுகின்றன.

நன்றி - இணையம் 

No comments:

Post a Comment