Thursday 3 May 2018

ஏழாம் சுவை - நகைச்சுவை - 6

- அறு(சு)வையா​னந்தா





ஜி யைச் சந்திக்கச் சென்றபோது அவரே ஆரம்பித்தார் -

" நமது சங்கத்தில் நடைபெற்ற மனைவி நல வேட்பு நாள் விழாக்களில் கலந்துகொண்டேன். மிகவும் மகிழ்ச்சியும், நிறைவும் சிலருக்கு நெகிழ்வும் தந்ததாக அமைந்திருந்தது. நிறைய குடும்பங்களில் அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த இந்த விழா எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் " என்றார்.

" இந்த மாதமும் பல இடங்களில் நடக்க இருக்கின்றது ஜி " என்றோம்.

"  கணவன் மனைவிகளிடையே ஒருவர் மற்றவரிடம் காணும் குறைகளே பல பிரச்சனைகளை உருவாக்கிவிடுகின்றது.  இந்த குறைகள் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடிப்பது -

1. சுயநலம்
2. ஊதாரித்தனமான செலவு
3. வம்பு பேசுதல்
4. சீண்டிக்கொண்டே இருத்தல்
5. வீட்டில் கவனமின்மை
6. ஆதிக்க மனப்பான்மை
7. வெளிவிவகாரங்களில் அதிக அக்கறை
8. சுத்தமின்மை
9. இன்னொரு ஆணிடமோ, பெண்ணிடமோ ஈடுபாடு   &
10. அலட்சியப்படுத்தல்

இவ்வளவு குறைகளுக்கிடையே பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வை சீர் செய்து வாழும் மனமொத்த தம்பதிகளை பார்க்கின்றோம் அல்லவா! இவர்களும்  அவ்வப்போது சண்டை  சமாதானமாகி வாழ்க்கைக்கு மேலும் சுவை  ஊட்டுவார்கள். இதை உணர்த்தத்தான் நமது முன்னோர்கள் புராணங்களிலே தெய்வீகத்  தம்பதியர்களான சிவன் - பார்வதி, விஷ்ணு - லட்சுமி, பிரம்ஹா - சரஸ்வதி
இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு பிறகு சமாதானம் அடைந்து உலகுக்கு சில நீதிகளைப் போதித்ததாக கதைகள் அமைத்தனர் " என்றார் ஜி.

" கணவன் - மனைவியருக்கு நீங்கள் தரும் அறிவுரை என்ன ஜி ?" எனக் கேட்டோம்.

" கணவன் மனைவி இருவருமே தங்களிடையே வரும் சண்டைகளை ஊடலாக நினைத்து உடனே சரி செய்ய வேண்டும். இம்மாதிரி சண்டைகளில் கோபத்தைத் தவிர்த்து மன்னிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்க்கக்கூடாது. சண்டையிலே மனைவியை வெல்ல அனுமதித்து கணவன் தோற்க வேண்டும். அப்படித் தோற்ற கணவர்கள்தான் வெற்றிகரமான குடும்பத் தலைவர்களாக திகழ்கின்றார்கள். ஏனெனில்

'வெற்றி'  பெற்ற மனைவி 
கணவனிடம் தன உள்ளத்தைப் பறிகொடுத்து 
அவன் சொல்கேட்கும் 
அன்பு அடிமையாக 
மாறிவிடுகின்றாள்!"
என்று முடித்தார் ஜி.

"நீங்கள் சொல்லும் ஜோக்குகளுக்கு சிரித்துவிட்டு செல்ல வந்த எங்களுக்கு, ஏன் எல்லோருக்குமே உபயோகமான அறிவுரை தந்தீர்கள் ஜி! மிக்க நன்றி. 
நிறைவாக ஒன்றிரண்டு ஜோக்ஸ் ப்ளீஸ்.." எனக் கேட்டோம்.

" ஓ..இந்தப் பகுதியே அதற்காகத்தானே...உங்களுக்காக கணவன்-மனைவி ஜோக்ஸ் -

  கணவன் குடும்பத்துக்கு தலை மாதிரிதான். ஆனால் மனைவி என்பவள் கழுத்து மாதிரி. கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது.

*************************************
டாக்டர்: "மேடம்... உங்க கணவருக்கு மனஅழுத்தம் அதிகமாயிடுச்சு. நல்லா சமைச்சு போடுங்க, சண்டை போடாதீங்க, உங்க பிரச்சனைகளை சொல்லாதீங்க. டிவி சீரியல் பத்தி பேசாதீங்க, எப்பவும் சந்தோஷமா பாத்துக்குங்க."
வெளியே வந்த மனைவியிடம்  கணவன்: "டாக்டர் உன்கிட்ட என்னம்மா சொன்னாரு?"



 மனைவி: "நீங்க பிழைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாரு...."

********************************************
  " வேலைக்காரனுக்கு உங்க சட்டையை குடுக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா? "

   "  என்ன ஆச்சு ?"


   "  இன்னைக்கு நீங்கதான்னு நினைச்சு..."


   "  அய்யய்யோ!  என்ன ஆச்சு ? "



   "  அவனை பூரிக்கட்டையால அடிச்சிட்டேன் ."
****************************************************

No comments:

Post a Comment