Friday 4 May 2018

ஏழாம் சுவை - நகைச்சுவை - 7

-   அறு(சு)வையா​னந்தா

    
ஜி யை சந்திக்கச் சென்றபோது அவர் தன் பக்தகோடிகளிடம் சிரிப்பவர்களின் வகைகள் பற்றி சொல்லிக்கொடிருந்தார்.

அவர் வகை படுத்தியதை சுருக்கமாகச் சொன்னால் -

தனக்குள் சிரிப்பவன் ஞானி 
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம் 
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன் 
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன் 
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி 
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன் 
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன் 
பிறர் காணச் சிரிப்பவன் கோமாளி 
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி 
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி 

பக்தகோடிகளை அனுப்பிவிட்டு எங்களிடம் வந்த ஜி, தெனாலிராமன், பீர்பால் மற்றும் முல்லா கதைகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் முல்லா பற்றி கேட்டதற்கு, ஜி கூறியதாவது -

முல்லா என்கிற  முல்லா நஸ்ருதீன்  சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம்.  உள்ளத்தை ஆராய்வது சூஃபித்துவத்தின் அடிப்படை.முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர்.முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை.வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள்.ஓஷோ, முல்லாவின் கதைகளை  நிறைய தன்  சொற்பொழிவுகளில் பயன்படுத்தியுள்ளார்.

ஜி சொன்ன முல்லா கதைகள் -.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ''உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார்.முல்லா, ''முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்'' என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ''கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா'' என்றார். உடனே கோபத்துடன், ''என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை'' என்றார் முல்லா.

*********************************************************************

முல்லாவின்கழுதை ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ''அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது'' என்றார். ''உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?'' என்று கேட்டனர். முல்லா, ''நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை'' என்றாராம்.

*******************************************************************

முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும்  மது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர்

ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும்,

நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும்
நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கில் ஏற்றப்படுவீர் என்றார் மன்னன். 

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் அவர் உயிருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. 

முல்லா நிலமையை எவ்வாறு சமளிக்கபோகிறர் என்று சபையோர் அவரையே கவனித்தனர். முல்லா எதைக் கூறி தப்பியிருப்பார்?

முல்லா மன்னனை நோக்கி மன்னர் அவர்களே...தாங்கள் என்னை தூக்கில் போடபோகிறீர்கள்   என்று பதற்றம் ஏதுமின்றிக் கூறினார். 

அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார். முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் முல்லாவைத் தூக்கில் போடவேண்டும். தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னனைத் திக்குமுக்காடச் செய்து விட்டார். அவரது அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து
அனுப்பினான்.

*******************************************
ஓஷோ சொன்ன முல்லா ஜோக்  -

முல்லா நசுருதீன் ஒரு வேளையில் சேர்ந்தார்....
சில நாட்கள் கழித்து அவர் முதலாளி அவரை கூப்பிட்டார்....
" முல்லா.. நீங்கள் இந்தத் துறையில் ஐந்து வருடம் அனுபவம் இருப்பதாகச் சொல்லி வேலையில் சேர்ந்தீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு முன் எந்த வேலையும் செய்யவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்....ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள் ?"

முல்லா: சார், நீங்க தானே பேப்பர்ல "கற்பனைத் திறம்" மிக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தீங்க?"

No comments:

Post a Comment