Friday 31 October 2014

கல்வி...31

கல்வி ஓர் அழியாச் செல்வம் என்று விளக்கிய வள்ளுவர்அந்த
அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்பதினால் வரும்
சிறப்புகளையும் குறிப்பிடுகிறார். அது கண் போன்றது என்கிறார்.
‘கண்’ என்றால் தமிழில் ஒளி என்று பொருள்.கல்வி எவ்வாறு
ஒளியாக விளங்குகிறது என்பதையும் விளக்குகிறார்.
எல்லா உறுப்புகளும் சரியாக இருந்தும், ‘கண்’ இல்லாவிட்டால்
ஒருவனால், பொருள்களையும், காட்சிகளையும், இயற்கையின்
அழகுகளையும் காண இயலாது. எனவே அவன் ஒரு முழுமை
பெற்ற மனிதனாகக் கருதப்படமாட்டான். இந்த உண்மையின்
அடிப்படையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், தேவையையும்
வற்புறுத்த விரும்பிய வள்ளுவர், கல்வியைக் கண்ணோடு
ஒப்பிடுகிறார்.

நம் வாழ்க்கையின்     இன்பதுன்பங்கள்     பலவற்றிற்கும்,
புறக்காட்சிகளும், நிகழ்ச்சிகளும்தானே காரணம்? நாம் பார்க்கும்
சில விபத்துகள் நம் உள்ளத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. நம்
கண்முன்னாலே அடிக்கடித் தோன்றி மறைகின்றன. இந்தக்
காட்சியை நாம் பார்த்திருக்காவிட்டால், எந்தப் பாதிப்பும்
ஏற்படாது இல்லையா?

மகிழ்ச்சியோ, துன்பமோ, நாம் பார்க்கும் காட்சி அல்லது
நிகழ்ச்சியால் தானே அமைகின்றது? இந்த அனுபவத்தை அல்லது
நுகர்வை எது வழங்குகிறது? கண். காலம்காலமாக அறிஞர்களும்
சான்றோர்களும் தாம் கண்டவற்றையும், அவற்றின் அடியில்
எழுந்த     சித்தாந்தங்களையும்,     கொள்கைகளையும்,
கண்டுபிடிப்புகளையும், அறிவுரைகளையும், இன்ன பிறவற்றையும்
நம் புலனுக்குக் கொண்டு வருவது கல்வியே. இக்காரணம் கருதி,
வள்ளுவர், கல்வியைக் கண் என்கிறார்.

கல்வியின் அடிப்படை எண்ணும் எழுத்தும். இலக்கியம், சமயம்,
தத்துவம், அறிவியல், கணிதம் எனக் கல்வியின் துறைகள்
அனைத்தும் எண்ணையும் எழுத்தையும் சார்ந்தே அமைந்துள்ளன.

சில துறைகளில் எண்ணின் சார்பு மிகுதியாகவும் சிலவற்றில் எழுத்தின் சார்பு
மிகுதியாகவும் உள்ளன. எண், எழுத்து
ஆகிய இரண்டும் மனிதர்க்கு இருகண்கள்.
இரண்டு கண்களும் பொருந்தி இருத்தல்
முகத்திற்கு அழகு. எண்ணும் எழுத்தும்
பொருந்தியிருத்தல் கற்ற கல்விக்கு அழகு.


எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் 
கண் என்ப வாழும் உயிர்க்கு.

No comments:

Post a Comment