Tuesday 28 May 2024

மகரிஷி அவர்களுடன்........19

1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிறைவில் ஆசிரிய பயிற்சிக்கு சென்றிருந்தபோது கிடைத்த அனுபவம் -

மகரிஷி அவர்கள் 45 நாட்கள் மௌனம் நிறைவு செய்து அருள்நிதியர் பயிற்சி துவங்கியிருந்தார்கள். மகரிஷி அவர்களை சந்திக்க நேரம் கேட்டபோது மதியம் இரண்டரைக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

சொன்ன நேரத்தில் மகரிஷி அவர்களின் அறைக்குச் சென்றிருந்தபோது கோவை பேராசிரியர் அ/நி சிவஞானம் ஐயா மகரிஷி அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். 

பேராசிரியர் அ/நி சிவஞானம் ஐயா &  மகரிஷி ( 1990 )

( கோவை பேராசிரியர் அ/நி சிவஞானம் ஐயா அவர்கள் மனவளக்கலை புத்தகம் பாகம் ஒன்றினை  தொகுத்து வெளியிட்டவர். ஞானமும் வாழ்வும் நூலினையும் கோவையிலிருந்து பதிப்பித்து வெளியிட்டார். ஆசிரிய பயிற்சிகளின்போது அவரின் தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது. கோவையில் மனவளக்கலை பிரபலமாக இவரும் ஒரு காரணம்.)

நானும் அவருடன் இணைந்து பல ஐயங்களை மகரிஷி அவர்களிடம் எழுப்பினோம். மகரிஷி அவர்களிடம் நான் கேட்டது : 'துரியாதீத தவம் செய்யும்போது சில நொடிகள்தான் சிவகளத்தில் இருக்கமுடிகிறது. தொடர்ந்து இறைநிலை உணர்வோடு இருக்க வழிகள் சொல்லுங்கள் '

அதற்கு மகரிஷி அவர்கள் " உங்களைப் போலவே பலபேர் எளிதாக இறைநிலை உணர வழி கேட்டிருக்கின்றார்கள். இந்த மௌனத்தின்போது இதைப் பற்றி நிறையவே சிந்தித்தேன்." இறைநிலை தவம் " என ஒன்றினை அன்பர்களுக்குத் தர வேண்டி அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தத் தவம் முழுமையாக உணரப்பட வேண்டும்.கருமையம், காந்த தத்துவம் போன்றவற்றை விஞ்ஞான விளக்கத்தோடு  பயிற்சிகள் தரப்பட வேண்டும்.  எதிர்காலத்தில் பிரம்மஞானப் பயிற்சி என ஒன்றினைத் தந்து அந்த பயிற்சியின்போது இறைநிலை தவம் தரப்பட்டால் நீங்கள் விருப்பப்படும்போதெல்லாம் பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ   இறைநிலையோடு ஒன்றியிருக்கலாம். மேலும்           " தற்போது நீங்கள் கற்றுக்கொண்டவரையில் இறைநிலை உணர இதனைப் படித்துப் பாருங்கள் "எனக் கூறி   இரண்டு தாளை பேரா. சிவஞானம் ஐயாவிடம் தந்தார்கள்.

உடனே அவர் மகரிஷி அவர்களிடம் "இதைப் பார்த்து நான் எழுதிக் கொள்ளலாமா ?'' எனக் கேட்டார். மகரிஷி அவர்கள் "எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் இதனை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் சில விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டும்" என்றார்கள். 

சிவஞானம் ஐயா உடனே தனது டைரியில் மகரிஷி தந்த தாளில் இருந்த விவரங்களை வேகமாக எழுதிக் கொண்டார். அப்போது அவர் எனக்கு தந்த அறிவுரை : " எப்போது மஹரிஷியைப் பார்க்க வருகின்றீர்களோ உங்கள் கையில் ஒரு நோட்டு, பேனா இருக்கவேண்டும். மகரிஷி தரும் பொக்கிஷங்களை உடனுக்குடன் எழுதிக் கொள்ளவேண்டும்."

அவர் தந்த அறிவுரையினை மறக்காமல் பின்பற்றினேன். 

இறைநிலை தவம் பற்றி முன்னதாக ஓரளவு தெரிந்து கொண்டது, மகிழ்ச்சியினைத் தந்தது. பரிட்சைக்குமுன் வினாத்தாள் கிடைத்த பூரிப்பு.

பிறகு சிவஞானம் ஐயாவிடமிருந்து டைரியினைப் பெற்று நான் எழுதி வைத்துக் கொண்டேன். இதில் சொல்லப்பட்ட கருத்துக்களை வேறு தலைப்பில் மகரிஷி அவர்கள் அன்பொளியில் பிரசுரித்தார்கள்.

திருச்சி வந்ததும் புது டைரியில் இந்த தவம் பற்றி எழுதியதைக் கீழே தந்துள்ளேன்:




ஞானவயலின் இந்த    10000வது பதிவினை மகரிஷி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.


No comments:

Post a Comment