Saturday 30 June 2012

கேள்வி ஞானம் - 2


கேள்வி கேட்க கற்றுக்கொள்ளுங்கள்


( தினமலரில் படித்தது )

இன்றைய சூழலில், கேள்வி கேட்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. 


 அதற்கு சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருப்பதற்கு கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு முக்கிய காரணம். ஆனால், சற்று வளர்ந்ததும் இதுபோன்ற சில குணங்களுக்கு பலரும் இடம் கொடுத்து விடுகிறார்கள். 


இது பள்ளி செல்லும் நாட்கள் முதல் கல்லூரி, அலுவலகம் என்று எதிர்காலம் முழுவதும் நீடிக்கிறது. இதனால், சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது, திறமை அவர்களுடனே மக்கி போய்விடுகிறது.


கேள்வி கேட்பது என்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை வைத்தே அவரது புத்தி சாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால் கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை எங்கே வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது. கேள்வி கேட்பவரது அறிவு மட்டும் வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும் சேர்த்துதான்...


கருத்தரங்கில், வகுப்பறையில், அலுவலகத்தில், பொதுஇடங்களில் என கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் வெகு சிலரே சரியாகவும், துள்ளிமாகவும் கேள்வி கேட்கின்றனர். சிறு வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களில் கேள்வி கேட்கும் திறனும் ஒன்று. இத்திறன் அறியாதவற்றை அறிந்து கொள்வதற்கும், புரியாதவற்றை புரிந்துகொள்வதற்கும், அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும்.


சரியான முறையில் கேள்வி கேட்க...

* உங்களது கேள்வி சுருக்கமாக இருப்பது மிக அவசியம். இதில் துவக்கம், முடிவு என்று பிரிப்பதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.



* நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களது கேள்வி உணர்த்த வேண்டும். அதற்கு கேள்வி தெளிவாக இருக்க வேண்டும். விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்; ஆனால் விதண்டாவாதத்திற்கு உரியதாக இருக்கக்கூடாது.


* உங்களிடம் அதிக கேள்விகள் எழும்பட்சத்தில், அவற்றில் இடத்திற்கு தக்கவாறு முக்கியத்துவம் அளித்து, வரிசைப்படுத்தி கேட்கவும்.


* தக்க நேரத்திலும், சரியான இடத்திலும் கேள்வி அமைவது அவசியம். உதாரணமாக, வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்திற்கு சம்பந்தம் உள்ள, தக்க சமயத்தில் கேட்கப்படும் கேள்வி வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


* படிக்கும் போது, எழுதும்போது, வேறு ஒரு செயலில் ஈடுபடும்போது என பல சமயங்களில் உங்களுக்குள் சந்தேகம் எழலாம். அதை காகிதத்தில் தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


* சில கருத்தரங்குகள், கூட்டங்களில் கேள்வி கேட்பதற்கு என்றே தனியாக நேரம் ஒதுக்கப்படும். அப்போது மட்டுமே கேள்வி கேளுங்கள். கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணங்களில் உங்களுக்குள் எழும் கேள்விகளை குறிப்பெடுத்துக்கொள்ளத் தவறாதீர்கள்.


* முதலில் உங்களது கையை உயர்த்தி, பதில் அளிப்பவரது அனுமதியை பெற்ற பிறகு, கேள்வி கேட்க துவங்குங்கள். அப்போது உங்களது குரல் வளம், அழுத்தம் உயர்ந்தும், சீராகவும் இருக்க வேண்டும்.


* தவிர்க்க முடியாத காரணங்களால், உங்களால் கேள்வி கேட்க இயலாமலோ, உரிய பதில் கிடைக்காமாலோ போகும்பட்சத்தில், உரிய நபரை தனியாக சந்தித்து பதில் பெற தயங்காதீர்கள். ஏனென்றால், இருவர் பங்கேற்கும் கலந்துரையாடல் சிறந்ததாகவே அமையும்.

No comments:

Post a Comment