Saturday 11 January 2014

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 13


கருமையத்தூய்மை 

" ஆன்மா என்றால் நாங்கள் வேறு ஏதோ ஒன்று என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கின்றோம்" என வியப்புடன் மாணவிகள் சொல்ல, அம்மா மேலும் தொடருகிறார்கள் -

" ஆன்மா என்ற சொல்லுக்குத்தான் ஒவ்வொரு மதத்திலும் எத்தனை, எத்தனை விளக்கங்கள்! இவை நமக்கு மிகுந்த குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றது. மகரிஷி அவர்கள்தான் கருமையம் என்ற சொல்லின் மூலம் விஞ்ஞானரீதியாக  ஆன்மாவை எளிதாக விளக்குகின்றார்கள்.
இன்றைக்கு நீங்கள் பாடங்களில் ஜீனோம் என மரபு பதிவுகள் பற்றி படித்திருப்பீர்கள்..இதுமாதிரிதான்  நம் கடந்தகால வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள், நம் முன்னோர்கள் பதிவுகள் என எல்லாம் காந்தபதிவுகளாக   ஆன்மாவில் அல்லது கருமையத்தில் சேர்ந்துவிடுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஆன்மா என்பது காந்த அலைப் பதிவுகள் கொண்ட கருமையம் எனலாம். 

மகரிஷி சொல்கிறார்கள் - 

ஒருவர் பிறந்து மூன்று வயது முதல் இன்றுவரை எண்ணிய எண்ணங்கள், சொல்லிய சொற்கள், செய்த செயல்கள் அத்தனையும் கருமையத்தில் மேலடுக்கு பதிவுகளாக உள்ளன. இவைகளை வினைப் பதிவுகள் எனவும் சொல்லலாம். மேலும் பின்னோக்கிச் சென்றால், அவரது பெற்றோர்கள், அவர்களது முன்னோர்கள், விலங்கினம், நான்கறிவு ஜீவன்கள், மூன்றறிவு உயிரினங்கள், இரண்டறிவு புழு வரை வந்த , செய்த செயல்கள் எல்லாமே கருத்தொடரால் கருவமைப்புப் பதிவுகளாக மனிதனிடம் கருமையத்தில் பதித்துள்ளன. சிற்றுயிரிலிருந்து  
சிறப்பு நிலையிலான மனிதன்வரையில் தன்மாற்றம் அடைந்த ஜீவ இனச் சரித்திரக் குறிப்பு பெட்டகம்தான் கருமையம் ஆகும். கருமையம் என்பது பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அடங்கிய தெய்வீக நீதி மன்றம்  எனவும் சொல்லலாம். "

மாணவிகள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

" நாம் எந்த செயலையும் நம் உடலில் உள்ள  பத்து இந்திரியங்கள் மூலமாகத்தான் செய்கிறோம். நாம் செய்யும் செயலினால் ஏற்படும் அதிர்வுகளும். இன்ப,துன்ப உணர்வுகளும் கருமையத்தின் தன்மையாக மாறிவிடும்" என அம்மா சொல்லிக்கொண்டிருக்க ஒரு மாணவி 

" பத்து இந்திரியங்கள் என்று சொன்னீர்களே, அவற்றைச் சொல்லுங்கள் " எனக் கேட்கிறாள்.

" நாம் உணர்வாகப் பெறும் தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்க்கும் உணர்வு மற்றும் கேட்கும் உணர்வுகளுக்கான ஐம்புலன் கருவிகள் தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவை ஐந்தும், தொழில்கருவிகளான கைகள், கால்கள், வாய், குதம் மற்றும் பால்குறி மொத்தம் பத்தும் பத்து இந்திரியங்களாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு கருவியும் கருமையத்தில் பதிவுகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. கருமையத்தின் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கின்றது" என்கிறார்கள் அம்மா.

" அப்ப மூளையில் உள்ள பதிவுகள் என்ன வேலை செய்கின்றன? " என ஒரு மாணவி கேட்க,

" நன்றாக யோசிக்கிறாய். நம் செல்போனில் உள்ள மெமரிகார்டுதான்  மூளை எனச் சொன்னேன் அல்லவா... கருமையத்திற்கும், மூளைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. இன்னும் சொல்லப்போனால் மூளையின் மூலமாகத்தான் கருமையத்தில் அனைத்தும் பதிவாகின்றன. உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் மூளை செயல்படாது. மூளையை இயக்கும் ஜீவகாந்தம்தான் ( மனம்தான் ) இப்போது இல்லையே!' என்கிறார்கள் அம்மா.

"கருமையப் பதிவுகள் என்ன செய்கின்றன?" என்கிறாள் ஒரு மாணவி.

" வீட்டில் அம்மா குழம்பு செய்யும்போது அதில் பல பொருட்களைச் சேர்க்கின்றார்கள். சேர்க்கப்படும் போருட்களுக்கேற்ப அது புளிகுழம்பாகவோ, காரக் குழம்பாகவோ, சாம்பாராகவோ அல்லது மோர்க்குழம்பாகவோ மாறுகிறது அல்லவா! அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் கருமையமும் அவன் செய்த, செய்யும் செயல்களுக்கு ஏற்ப 
பதிவுகள் பெற்று அதற்கான விளைவுகளைத் தருகின்றன. இதைதான் செயலிலே விளைவை இணைத்த இறைவனின் திருவிளையாடல் என்கிறார்கள். இந்த உண்மைகளை மகரிஷி அவர்கள் பயிற்சிகளாகக் கொடுத்து, உள்ளதை உணர வைத்து, நல்லதை செய்ய வைத்து, அல்லதை விடுவதற்கு நம்மைத் தயார் செய்கின்றார்கள். இவற்றை நீங்கள் தெளிவாக உணர்ந்தால் யாருக்கும், எந்த ஜீவனுக்கும் எவ்விதமான துன்பமும் அளிக்கக்கூடாது என்கின்ற தெய்வீக அற வுணர்வு உண்டாகும். இதுவே உங்களின் அறிவு அடையப்போகும் முழுமைப்பேற்றுக்கு  முதல் படியாகும்" என்கிறார்கள் அம்மா.

" எனது கருமையப் பதிவுகள் எப்படிப்பட்டது? நான் எப்படி நல்ல பதிவுகளை மாத்திரம் வைத்துக்கொள்வது?" எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.

" பாராட்டுக்கள்!  உன்னைமாதிரியே உலகில் உள்ள அனைவரும் இந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டால் இன்பமய  உலகத்தை உருவாக்கிவிடலாம்! இதற்குத்தான் கருமையத்தூய்மை என்ற தலைப்பில் மகரிஷி விரிவாக விளக்கியிருக்கின்றார்கள். அவற்றைப் பார்க்கலாம்."

- தொடரும் 

No comments:

Post a Comment