Thursday 28 March 2013

வேதாத்திரி மகரிஷியும் பெரியாரும்


ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் மகரிஷி அவர்கள் “கடவுளைக் காணலாம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்கள்.  உலக சமுதாய சேவா சங்க இன்றைய தலைவர் அருள்நிதி S.K.M. மயிலானந்தம் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச்
செய்திருந்தார்.

திராவிடர் கழகதைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார். “ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப் படுத்தி
விட்டுப் போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே” என்றார். 

“அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைவனை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார்.  அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார். நானும்
அதைத்தான் சொல்கிறேன்.  இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவன் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல்
ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளான். அவனுள் இறைவனே அறிவாக உள்ளான். இதை சிந்தித்து அறியச் சொல்கிறேன். கல்லும் முள்ளுமாக உள்ள களர்
நிலத்தைப் பண்படுத்துவதுபோல மக்கள் மனத்தைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார். அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை” என்றார்கள் மகரிஷி அவர்கள்.

தந்தை பெரியார் ஒருமுறை கூடுவாஞ்சேரிக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே பெரியாரிடம் அருள் தந்தையின் ‘உலக சமாதானம்’ என்ற நூலை ஒரு அன்பர் கொடுத்துள்ளார். அதைப் பற்றிய பேச்சு அங்கு அன்பர்களிடம் எழுந்தது.
அதற்குப் பெரியார் ‘அதுதாண்டா ஒருநாள் உல்கில் வரப்போகிறது நீ என்ன சொல்றே, அது தப்பு என்கிறாயா?’ என்றாராம். அந்தப் புத்தகம் எழுதியவர் இந்த ஊர்க்காரர் என்றதும் அவரை அழைத்து வரச் சொன்னாராம்.

 மகரிஷி பெரியாரைக் காண விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். இரு சிந்தனையாளர்களும் சந்திக்கிறார்கள். தந்தை பெரியார் மகரிஷியிடம் “நீங்கள் எழுதிய உலக சமாதானம் புத்தகம் பார்த்தேன். நீங்கள் அப்பணியை
தொடர்ந்து செய்யுங்கள். எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இது எப்படி இந்தப் பசங்களுக்கு (மக்களுக்கு) புரியப் போகிறதோ?” என்றாராம்.

No comments:

Post a Comment