Friday 15 March 2013

உலக நுகர்வோர் தினம்




from  தினமலர் - 

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள். "தற்போது நுகர்வோர் நீதி' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

யார் நுகர்வோர்: நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். உதாரணமாக, தந்தை குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார். இதில் தந்தை வாடிக்கையாளர். அதை சாப்பிடும் (பயன்படுத்தும்) குழந்தை நுகர்வோர். வணிகத்தில் எத்தனையோ விதமான வியாபாரம் நடக்கிறது. இவை நுகர்வோருக்கு சரியான விலையில், சரியான தரத்தில் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. உரிமைகள் என்ன என்பதே தெரியாமல் வியாபாரிகளிடம் நுகர்வோர் ஏமாறுகின்றனர். பணம் மட்டுமே குறிக்கோளாக வியாபாரிகளும் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

எப்படி வாங்குவது: தினமும் பல பொருட்கள் அறிமுகமாகின்றன. நகர்ப்புறங்களுக்கு சமமாக கிராமப்புற மக்களும் பல்வேறு வசதிகளை பயன்படுத்துகின்றனர். அப்பொருள்களின் தரம், விலை மற்றும் அந்தப் பொருளுக்கான நுகர்வோர் உரிமை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. பொருட்களை வாங்கும் போது அக்மார்க், ஐ.எஸ்.ஐ., எப்.பி.ஓ., உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை நுகர்வோர் சோதிக்க வேண்டும். பொருள்களின் விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி தேதி, ரசீதில் சேவை வரி, பதிவு எண், மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும்.

உரிமைகள் என்ன

* பாதுகாப்பு உரிமை

* தகவல் பெறுவது

* தேர்ந்தெடுக்கும் உரிமை

* உத்தரவாதம் பெறும் உரிமை

* நிவர்த்தி பெறும் உரிமை

* உரிமைகளை தெரிந்து கொள்ளும் உரிமை

(மேலும் விவரங்களுக்கு www.consumeraffairs.nic.in என்ற மத்திய நுகர்வோர் நலன் அமைச்சக இணையதளத்தை பார்க்கவும்)

என்ன செய்வது: நுகர்வோர் உரிமை குறித்த புத்தகங்களை படித்து, நுகர்வோர் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமைகள் குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும். அரசும், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் உரிமைகளையும், அதன் சட்ட திட்டங்களையும் மக்களுக்கு செய்திதாள், "டிவி' உள்ளிட்ட வழிகளில் தெரியப்படுத்த வேண்டும். நுகர்வோர் எதிர்த்து போராடினால் தான், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை, தங்களது பகுதியில் குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுத்த வேண்டும் என இந்நாளில் உறுதி ஏற்போம்.

( திருச்சி மாவட்ட நுகர்வோர் இயக்கத்தில் மூன்று ஆண்டுகள் தீவிரமாக 
பணி  செய்த அனுபவம், இந்த இயக்கத்தின் சாதனைகளுக்காக இந்திய அளவில் பாராட்டு பெற்று,  பாராட்டு மேடையில் இயற்கை எய்திய எனது 
நண்பர் திரு முத்துவேலன் ஞாபகம், இன்னும் பல நினைவுகள் நிழலாடுகின்றன..)

1 comment: