Tuesday 27 August 2013

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 24

 என் நீங்காத நினைவுகளை ரொம்ப நாள் கழித்து ( 2013ம் ஆண்டில் எட்டு மாதத்திற்கு பிறகு) எழுதுகிறேன்.

இன்று கோகுலாஷ்டமி.





காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்

கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா! 



பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!


கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்

கீதம் இசைக்குதடா, நந்த லாலா! 



தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!


( பாரதியார் மற்றும் கண்ணதாசன் எழுதிய பல கண்ணன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் )

ஆவணி மாதம் வந்தாலே அம்மாவுக்கு நிறைய வேலை - பிள்ளையார் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு வேண்டிய கொழுக்கட்டை மற்றும் பலகாரங்களுக்குத் தேவையானவற்றை ரெடி பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி கிட்டத்தட்ட ஒரு தீபாவளி மாதிரி - கிருஷ்ணனுக்கு பிடிச்ச சீடை, முறுக்கு, தட்டை என பலவித கார, இனிப்பு பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். கை முறுக்கு சுற்றுவது ஒரு கலை - அம்மா பல டிசைன்களில் முறுக்கு சுற்றுவார்கள். சீடைகளில் உப்பு,இனிப்பு, காரம் என பல டேஸ்ட்களில் பண்ணுவார்கள். சாமிக்குப் படைக்கும்வரை  யாரும் எச்சில்  பண்ணாமலும் பார்த்துக் கொள்வார்கள்.

சேகர், சுந்து இவர்களுக்காக  அப்பா இரண்டடி  உயர  கிருஷ்ணன் பொம்மை வாங்கிவந்து பூஜை அறையில் வைத்திருந்தார்கள். அந்த பொம்மைத் தலையில் மயில்பீலி அழகாக இருக்கும். அதிலிருந்து நாங்கள் மயிலிறகு எடுத்துக் கொள்வோம்.

படையல் சாயந்திரம்தான் நடக்கும். கோலம் போடும்போது கண்ணன் பாதங்கள் வரைவார்கள். அவல், பொறி, பாயசம், பானகம் மற்றும் கிருஷ்ணனுக்குப் பிடித்த பழ வகைகளுடன் முக்கியமாக வெண்ணை வைத்துப் படைப்பார்கள். கிருஷ்ணன் பொம்மை வாயில் வெண்ணை தடவி விட்டுவிடுவோம். 

ஒரு தடவை மாயூரம் பெரியகோவிலுக்குப் பக்கத்தில் உரியடி திருவிழா நடந்ததைப் பார்த்திருக்கின்றேன்.  கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு பெரிய கழியால் மேலிருந்து தொங்கும் மண் கலயத்தை அடிக்க வேண்டும். 

சிதம்பரத்தில் படித்தபோது அங்கு வழுக்குமரம் ஏறி உரியடி செய்ததைப்  
பார்த்திருக்கின்றேன்.

முதன்முதலில் மாலாவைப் பார்க்க சென்னை சென்றிருந்தபோது ( திருமணத்திற்கு 10 நாட்கள் முன்னால்  ) கிருஷ்ண ஜெயந்திக்கு அவள் செய்திருந்த வெல்ல சீடைகள் சாப்பிட்ட நினைவே இன்றைய மலரும் நினைவுகளுக்கு முக்கிய காரணம். 

அதற்குப் பிறகு அவள் சீடை செய்ததாக ஞாபகம் இல்லை!

1 comment:

  1. haha...ஏன்...இன்னும் சீடை வாயில அடச்சுட்டு இருக்கா?? :))

    you shd write எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - series more often...

    ReplyDelete