Saturday 21 December 2013

WEEKEND WISDOM

கேள்வி: இன்றைய கால மாணவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இதிலிருந்து தெளிவு பெறுவது அதாவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகரிஷி: மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிகரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி. அதுவும் மனவளக்கலையில் சேர்ந்ததுதான். அதைச் செய்தால்தான் மாணவர்களினுடைய மனநிலை சரியாக, தெளிவாக இருக்கும். மேலும் மேலும், முயற்சி விடா முயற்சி நன்மை தரும்.

கேள்வி : ஐயா.ஞானியர்கள் என்பவர்கள் யார்?

மகரிஷி : நான் போய்க் கொண்டிருக்கும்பொழுது ஒருவர் வந்து இது நன்றாக இருக்கிறது. எனக்கு வேண்டும் என்று என் மேல் துண்டை இழுக்கிறார். நான் சரி என்று விட்டு விடலாம். எனக்கு அதன் மீது கடும்பற்று என்றால் நான் அதை விட மாட்டேன். அவர் என் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். நான் பார்ப்பேன். வேறு வழியில்லை. உடனே என் வாயால் அவர் கையை கடித்து விடுவேன். இது சந்தர்ப்பத்தால் வெளிப்படும் செயல். ஆனாலும் கருத்தொடர் மூலம் விலங்கினத்தில் இருந்து வந்ததுதான். அவ்வளவும் உள்ளே அடக்கமாக இருக்கிறது. மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்களிடம் அடங்கியுள்ள பதிவுகள் செயலாக மாற அவர்களுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அதனால் அப்பதிவுகள் அடங்கி இருக்கிறது என்று அர்த்தம். ஆக எல்லோரிடமும் இருக்கும் பிறர் வளம் பறித்துண்ணும் செயலும், பிறர் உயிரை வருத்தி வாழ்தலும் அடங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டு வந்தால்தான் மனிதனாக வர முடியும். அத்தகையவர்கள் தான் மெய்ப்பொருள் உணர்ந்த ஞானியர்கள்.

No comments:

Post a Comment