Wednesday 31 December 2014

SMILE.......229


எல்லோரும் எழுத்தாளரே - கடுகு 


ஹலோ.. எழுத்தாளர் சார்...உங்களைத்தான் கூப்பிடுகிறேன். ஆமாம் உங்களைத் தான் எழுத்தாளர் என்று கூப்பிடுகிறேன். உங்களில் பலர் எத்தனை கதை, கட்டுரைகளை மனதிலேயே எழுதிக் கிழித்துப் போட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால், எத்தனையோ நாவல்களையும் கவிதைகளையும் எழுதி இலக்கிய உலகத்தை நிரப்பி இருப்பீர்கள்! (ஏன், நான்கூடத்தான்!)

பாவம், உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதாவது அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டு அல்லது சமாதானப்படுத்திக் கொண்டு அல்லது.. ஏமாற்றிக் கொண்டு எழுத்தாளராக முடியாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு சில உபயோகமான குறிப்புகள் தர எனக்கு ஆசை. கதை அமைப்பு, நடை முதலிய துறைகளில் சிறிது கோடி காட்ட எண்ணம். மலர்ந்தும் மலராத எழுத்தாளராகிய நீங்கள் இவைகளை வைத்துக் கொண்டு இந்திரஜாலம் செய்துவிட மாட்டீர்களா? சாமர்த்தியசாலிகள் ஆயிற்றே நீங்கள்!

சிரிப்பு சிறுகதை


முன்பெல்லாம் நம் பத்திரிகைகளில் ஹாஸ்யக் கதைகள், ஹாஸ்ய வெடிகள் வெளியாகும். இப்போது வெளியாவதில்லை. ஆகவே ஹாஸ்ய கதை எழுதாதீர்கள். இப்போது சிரிப்புக் கதைகள், நகைச்சுவை கட்டுரைகள் தான் வெளியாகின்றன. அதனால் சிரிப்புச் சிறுகதை எழுத முனையுங்கள்!

சிரிப்புச் சிறுகதைகளின் கதாநாயகனுக்கு சேகர் என்றோ ரமேஷ் என்றோ பெயர் வைக்கக் கூடாது. கதாநாயகிக்கு சுந்தரி என்றோ மஞ்சுளா என்றோ இருக்கக் கூடாது. இந்த மாதிரிப் பெயர்களே கதைகளில் வரக்கூடாது.

திப்பிராஜபுரம் வஜ்ஜிரவேலு, சுங்குவார்பேட்டை அங்குசாமி, ஜிலுஜிலு கம்பெனி மானேஜர் ஜம்புகேசவலு, `சண்டமாருதம்' ஆசிரியர் மங்கள சபாபதி, பர்வதவர்த்தினி அம்மாள், மீனலோசநாயகி, ஆடியபாதம், பரிமள குஜாம்பாள் என்ற மாதிரிப் பெயர்கள்தான் சிரிப்பு வருமாம்.

இரண்டாவது: கதையில் பல இடங்களில் பகபகவென்று சிரித்தாள்- வயிற்று வலிக்க சிரித்தாள், ஹாஹ்ஹா, ஹாஹ்ஹா, ஐயோ, அம்மாடி, சிரிப்பு தாங்க முடியலையே' என்று எப்படியாவது சேர்க்க வேண்டும். அப்போதுதான் கதையில் சிரிப்புச் சூழ்நிலை உண்டாகும்.

மிகைப்படுத்தல் தான் சிரிப்பின் ரகசியம். ஆகவே கதாநாயகன் இட்லி சாப்பிட்டான் என்று எழுதுவதற்கு பதில் `பதினேழு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, கால் லிட்டர் காபியை மடக் மடக்கென்று குடித்தான்' என்று எழுதினால் வாசகர்கள் இளிப்பார்கள்!

உபமானத்திலும் புதுமை வேண்டும். வீணையும் இசையும் என்பது போன்ற பழங்காலத்தை உதறிவிடுங்கள். ஜிகினாவும் கவர்ச்சியும் போல, சென்னையும் தண்ணீர் பஞ்சமும் போல, பத்திரிகையும் துணுக்கும் போல என்று எழுத வேண்டும்.

கதையில் வரும் தெருப் பெயர்கள், வீட்டுப் பெயர்கள் போன்றவையிலும் சிரிப்பு குமிழ்விட்டுக் கொப்பளிக்க வேண்டும். `ஜின்னான்னக்கடி உருண்டை கிருஷ்ணன் தெரு, `ஆப்பக்கார சிங்கணசாமி வீதி' என்பது போன்றவைகளைப் போட்டு நிரப்ப வேண்டும்.

சிரிப்புக் கதைகளுக்கு நடைதான் முக்கியம். கடிதங்களாகவே கதை எழுதும் பாணி, `பானி' (தண்ணீர்) பட்ட பாடு ஆகிவிட்டது. இருந்தாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்கள். இந்தக் கடிதக் கதைகள் கலியாணத்தில்தான் முடியும். மற்றொரு விதம், மெட்ராஸ் தமிழில் `பிச்சு' வாங்குவது, `ஐயோ, என்னை விட்டு விடுங்கள்' என்றாலும் அதை விடாமல் நையப் புடைக்கிறார்கள். நமது தொல்காப்பியமும் திருக்குறளும் சிலப்பதிகாரமும் அழிந்து போனாலும் போகலாம். ஆனால் இந்த `இன்னா வாத்யரே' தமிழ் சாகாது என்பது நிச்சயம்.

மூன்றாவது விதம்: ஆங்கிலத்தை இடையிடையே போட்டுச் சிலேடை செய்வது, ஆங்கிலத்தைத் தமிழ் கதைகளில் அதாவது சீரியஸ் சிறுகதை, நாவல்களில் கூட உபயோகிப்பது ஃபாஷனாகிவிட்டது. சிரிப்பு கதைகளில் ஜோக்கடிக்க ஆங்கில வார்த்தைகளைப் போடலாம்.

இவைகளை எல்லாம் விடச் சிரிப்புச் சிறுகதை எழுதத் தேவை நல்ல கதை. நல்ல சிரிப்பு சம்பவங்கள். (இவைகள் இருந்தால் மேலே கூறிய வேறு எவையும் தேவையில்லை.)

No comments:

Post a Comment