Wednesday 13 January 2016

பயன்கள்.....1


அதிகாலை எழுவதால் 5 பயன்கள் 


இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். அதிகாலை கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. நாம், காலங்காலமாக இந்த இயற்கை நியதியைப் பின்பற்றிவந்ததால்தான், முன்பு நமக்கு தொற்றுநோய்த் தாக்குதல்களைத் தவிர, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பெரிய அளவில் இல்லாமல் இருந்தன. இன்று, இரவில் நீண்ட நேரம் விழிப்பதும் பகலில் நெடுநேரம் கழித்து எழுவதும் சகஜமாகிவிட்டதால், நம் மூளையில் இருக்கும் மன சுழற்சிக் கடிகாரம் (Circadian rhythms) இயற்கையின் விதிகளுக்குப் புறம்பாக மாறிவிட்டது. அதிகாலை எழுவதால் ஏற்படும் பலன்களைத் தெரிந்துகொண்டால், நாமும் இயற்கையோடு இணைந்து ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். 

மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் பசி எடுக்கும். காலையில் சாப்பிடுவதால், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். மேலும், இரவு 9-10 மணிக்குள் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனைச் சுவாசித்தால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் வராது. அதிகாலை 4.30 - 5.30 மணிக்குள் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது,  உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.

நன்றி - விகடன் 

No comments:

Post a Comment