Thursday 2 August 2012

ஆடிப்பெருக்கு

திருச்சி : பருவமழை பொய்த்துப் போனதால் காவிரி ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்ட காவிரியாய் உள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களை இழந்து காணப்படுகிறது.
ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்து ஆகஸ்ட் மாதம் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் அதாவது ஆடி 18ம் நாளன்று காவிரியில் நீராடி வழிபடுவது காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வழக்கம். புதுமணத்தம்பதிகள் தாலி பிரித்து மாற்றி காவிரி அன்னையை வழிபடுவார்கள்.


கடந்த ஆறு ஆண்டுகளாக ஆடிபெருக்கு பண்டிகையின்போது, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், நடப்பாண்டு காவிரி வறண்டு போனதால், ஆடிப்பெருக்கு கொண்டாடும், டெல்டா மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் திறக்கும் நீரின் மூலம், 11 டெல்டா மாவட்டங்களில், 16.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12ல் துவங்கி தொடர்ச்சியாக, ஏழு மாதம் நீர் திறப்பதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.


ஆகஸ்ட் முதல்வாரம், ஆடிபெருக்கு பண்டிகையின் போது, டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் மக்கள், விவசாயிகள் குடும்பத்துடன் காவிரியில் புனித நீராடி, காவிரியன்னையை வழிபாடு செய்வது வழக்கம். 2005ல் டெல்டா பாசனத்துக்கு, ஆக.,4ம் தேதி நீர் திறக்கப்பட்டது. எனினும், டெல்டா மாவட்ட பக்தர்கள் ஆடிபெருக்கு பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காக காவிரியில் ஒருவாரம் ஸ்பெஷலாக நீர்திறக்கப்பட்டது. கடந்த, 2006ல் குறித்தபடி ஜூன் 12ம் தேதியும், 2007ல் ஜூலை 18ம் தேதியும், 2008ல் ஜூன் 12ம் தேதியும், 2009, 2010 என, இரு ஆண்டுகளில் ஜூலை 28ம் தேதியும் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் ஆடிபெருக்கு நாளில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரையோர மாவட்ட மக்கள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.


ஆனால், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தவறியதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு, 36.730 டி.எம்.சி.,யாக குறைந்து விட்டது. நீர் இருப்பு குறைவாக இருந்ததால், டெல்டா குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை. எனினும், ஆடிபெருக்கு பண்டிகைக்காக காவிரியில் நீர்திறக்கப்படும் என, கரையோர மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். வரும் 2ம் தேதி ஆடிபெருக்கு பண்டிகை என்பதால், ஒரு வாரம் முன்னதாக காவிரியில் நீர் திறந்தால் மட்டுமே, ஆடிபெருக்கு நாளில் காவிரி கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையும். ஆடிபெருக்கு பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக அரசு எந்தவித உத்தரவும் வெளியிடவில்லை. இதனால் இந்த ஆண்டு வறண்ட காவிரியில்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்


Thanks - Dinamalar & OneIndia


செயற்கை காவிரி: 



நடப்பாண்டு திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் ஆடி 18ம் பெருக்கு நாளில், புதுமணத் தம்பதியர் காவிரி ஆற்றில் மாலைகளை விடவும், காவிரிக்கு ரெங்கநாதர் சீர் தரவும் வசதியாக மாநகராட்சி சார்பில், பொக்லைன் மூலம் அகழி போல் செயற்கை கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment