Tuesday 28 August 2012

உயிர் காத்த பருந்து

From Paulo Coelho's book -

செங்கிஸ்கான் , உலகையே ஆட்டுவித்த மங்கோலிய அரசன்,மிக சிறந்த வீரன் . ஒரு முறை தன் பரிவாரங்களுடன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான் . அப்போது அவனுக்கு வேட்டையாடும் ஆசை ஏற்பட்டது மேலும் வேட்டையாடியவற்றை தன் வீரர்களுக்கு உணவாக கொடுக்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டதால் , சில குதிரை வீரர்களை அழைத்துக்கொண்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தான். 

வெகு நேரம் திரிந்தும் அவ்வீரர்களுக்கு எதுவுமே கிடைத்த பாடில்லை. பசியும் தாகமும் வாட்ட ஆரம்பித்தது . வெறும் கையுடன் திரும்புவதில் மன்னனுக்கு இஷ்டமில்லை . எனவே வீரர்களை திரும்ப அனுப்பிவிட்டு தான் மட்டும் காட்டுக்குள் சுற்றிகொண்டிருந்தான். நேரம் ஆக ஆக தாங்கமுடியாத தாகம் வாட்டியது . எனவே ஏதாவது நீர் நிலைகள் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தான்  செங்கிஸ்கான் .

செங்கிஸ்கானை பொருத்தமட்டில் எப்போதுமே ஒரு பருந்து அவனிடம் இருந்து வந்தது . அந்த பருந்தை தன் நண்பனாகவே பாவித்து வந்தான் . பல போர்களங்களில் , திக்கு தெரியாத காடுகளில் ,இந்த பருந்து ஒரு வழிகாட்டியாக உதவி செய்து வந்தது . அதனால் சக்கரவர்த்தியின் தோளோடு இருக்கும் பாக்கியம் அந்த பறவைக்கு வாய்த்திருந்தது.
நெடுநேர தேடுதலுக்கு பிறகு , ஒரு பாறையின் இடுக்கு வழியே சிறிது சிறிதாக தண்ணீர் கசிவதை பார்த்தான் செங்கிஸ்கான் . உடனே தன் இடுப்புபையில் வைத்திருக்கும் ஒரு வெள்ளி குவளையை எடுத்து ஒழுகும் தண்ணீரை பிடித்தான் .குவளை நிறைந்தவுடன் அதை குடிப்பதற்காக கையில் ஏந்தினான் . ஐயோ பரிதாபம், ஓடி வந்த பருந்து அவன் மீது அமரும் முயற்ச்சியில் தண்ணீரை கொட்டிவிட்டது . 


அடக்கமுடியாத கோபம் வந்தாலும் , அடக்கிக்கொண்டு மறுபடியும் சொட்டு சொட்டாக விழும் நீரை பிடிக்க ஆரம்பித்தான் . இம்முறை அதை குடிக்க முயலும் போது மீண்டும் அந்த பருந்து அவனுடன் விளையாட ஆரம்பித்தது , முடிவில் தண்ணீர் கீழே கொட்டியது . 

என்னதான் இருந்தாலும் ஒரு பறவை தன்னுடைய அவசரம் தெரியாமல் விளையாடுவதா ? இதை யாரேனும் பார்க்க நேரிடில் நாடாளும் மன்னன் ஒரு பறவையை சமாளிக்கமுடியாமல் திணறுவதை கண்டு சிரிக்கமாட்டார்களா ? கோபம் தளைக்கேற வாளை உருவினான் , இம்முறை தண்ணீரை பிடித்துக்கொண்டே பருந்தை கவனித்தான் , மீண்டும் குடிக்கும் நேரத்தில் பருந்து அவனை நோக்கி வந்தது , ஒரே வெட்டில் அதை இரண்டாக பிளந்தான் ஆனாலும் தண்ணீர் குவளை கீழே விழுந்ததது. பாறை வழியே வந்து கொண்டிருந்த தண்ணீரும் நின்றுவிட்டிருந்த நிலையில் அந்த பாறையின் மீது ஏறினால் தண்ணீர் கிடைக்குமென்று நினைத்து ஏறினான் .

அய்யகோ ! என்ன விபரீதம் !இந்த சின்ன நீர்குட்டையில் செத்து மிதப்பது பயங்கர விசமுள்ள நாகமல்லவா ! இதை குடித்திருந்தால் நான் அடுத்தகணமே மரணித்திருப்பேனே ! என்னை காப்பாற்ற அல்லவோ இந்த பருந்து தன் உயிரை விட்டிருக்கிறது ,அத்தகைய நண்பனையா நான் வெட்டி கொன்றேன் ! என்றெல்லாம் அவன் மனது பதறி அழுதது !

பருந்தின் உடலை கையில் எடுத்துகொண்டான் , அதை பொன்னால் வேய்ந்து தனது சிம்மாசனத்தின் மேல் வைத்து மிக பெரிய மரியாதை கொடுத்த செங்கிஸ்கான் , அதன் இரண்டு சிறகுகளிலும் பொன்னால் எழுதிய வாசகங்கள் வருமாறு

 கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் , எக்காலத்திலும் தோல்வியை மட்டுமே தருபவை

" என்ன குற்றம் செய்தாலும் , என்ன துரோகம் இழைத்தாலும் ,நண்பன் என ஒருவனை நினைத்தபட்சத்தில் அவன் நண்பனாகவே தொடருவான் "

2 comments: