Sunday 6 April 2014

NATURE....4


கடல் ஆமைகளுக்கு நீண்ட துடுப்பு போன்று உறுப்புகள் இருப்பதால் அவற்றால் எளிதாக கடலில் நீந்த முடிகின்றது. உடலின் முன்புறம் அமைந்துள்ள இந்த உறுப்புகள் ஒரு விமானத்தின் இறக்கைகளைப் போல உள்ளன. இந்த உறுப்புகள்தான் அன்றாட வாழ்க்கைக்கான இயங்கு சக்தியை ஆமைகளுக்குத் தருகின்றன. கடலில் ஆமை நீந்துவதைப் பார்ப்பது ஒரு வியப்பூட்டும் அனுபவம்!
 

உலகில் அதிக நாட்கள் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்று கடல் ஆமை. இதனுடைய மேலு ஓடு இதய வடிவில் இருக்கிறது. இது மிகவும் உறுதியானது. ஆமையின் மிருதுவான உடல் பகுதியை இது பாதுகாக்கிறது. ஆமையின் கழுத்து மிகச் சிறியது. ஆனால் சுருங்கி விரியக்கூடியது. சராசரியாக ஒரு ஆமை 115 கிலோ எடை இருக்கும்.
 

கடலில் வேகமாக நீந்தும் ஆமை, கடற்கரையில் மிக மெதுவாகத்தான் நடை பயிலும். இதற்கும் அந்தத் துடுப்பு போன்ற உறுப்புகள்தான் பயன்படுகின்றன. மணலில் ஊர்வது அதற்குக் களைப்பூட்டுவதாக இருந்தாலும் முட்டை போடுவதற்காகவே கடற்கரைக்கு ஆமை வருகிறது.
 

கடற்கரையில் முட்டையிட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் செல்லும் ஆமைகள் மீண்டும் 30 ஆண்டுகள் கழித்துகூடத் தான் முட்டையிட்ட இடத்துக்குச் சரியாக வந்து சேரும். திரும்பவும் அதே இடத்தில் முட்டைகளை இடும். கடல்நீர் மட்டத்தை விட உயரமாக உள்ள பகுதியைத்தான் முட்டை இடுவதற்கு இவை தேர்வு செய்கின்றன. கடலில் பெரிய அலை வரும்போது கடற்கரையிலுள்ள முட்டைகளை அடித்துச் சென்று விடுவதைத் தவிர்ப்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு.
 

ஆமை கூடு கட்டுவது என்பது மணலில் குழி தோண்டுவதுதான். அந்தக் குழிதான் அதன் கூடு. அதற்குள் ஒரு சமயத்தில் எண்பதிலிருந்து நூற்று ஐம்பது முட்டைகள் வரை இட்டுவிட்டு குழியை மூடிவிட்டுச் சென்றுவிடும். இந்தக் குழிகளை மனிதர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது!
 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆமைகளின் முட்டையிடும் காலம். பெரும்பாலும் இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள் முட்டைகளை இடும். முட்டைகளை இட்டவுடன் அதன் வேலை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு முட்டைகளைப் பாதுகாக்கவோ, குட்டிகளைப் பார்ப்பதற்கோ பெரிய ஆமை வராது!முட்டைகளின் மேல் பகுதி மிருதுவாக, நெகிழும் தன்மையுடையதாக இருக்கும். மணல் சூட்டினால்தான் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வருகின்றன. இப்படி முட்டைக்குள் இருந்து குஞ்சுகள் வெளிவர 55 நாட்கள் ஆகும்.
 

குட்டி ஆமைகளின் பற்கள் மிகவும் கூர்மையானவை. இதைக் கொண்டு முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளிவருகின்றன. வெளிவரும் குட்டிகளின் நீளம் 5 செ.மீ. இருக்கும்.
 

வெளியே வந்தவுடன், வந்த வேகத்திலேயே கடலுக்குள் இந்தக் குஞ்சுகள் சென்றுவிடும். கடலுக்குள் சென்றவுடன் லாகவமாக நீந்த ஆரம்பித்துவிடும்!
பின்னர் நெடும் பயணம்தான். வழியில் சிறிய நண்டுகளையும் நத்தைகளையும் உணவாக உட்கொண்டு வளர ஆரம்பிக்கும். ஏதாவது வெதுவெதுப்பான வளைகுடப் பகுதியைத் தேடிச் சென்றுவிடும். அங்கேதான் அவற்றின் வாழ்க்கையின் அடுத்த பகுதி ஆரம்பிக்கிறது. அங்கு சுமார் 10 ஆண்டுகள் வசிக்கும். அங்கிருக்கும் ஸர்காஸýம் என்ற கடற்பாசிகளை உண்டு வாழும்.
 

அதன்பிறகு அதிக ஆழமில்லாத பகுதிக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும். அங்கு கிடைக்கும் சிறுசிறு நண்டுகள், நத்தைகள், சிறு இறால்கள் மற்றும் ஜெல்லி மீன்களை உண்டு வளரும். இந்த ஜெல்லி மீன்கள் அதிகம் இருந்தால் கடல் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். ஜெல்லி மீன்களின் எண்ணிக்கையைக் கடல் ஆமைகள் குறைப்பதால் "மீனவர்களின் நண்பன்' என்ற பெயரும் ஆமைக்கு உண்டு.
 

இப்போது கடல் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இவற்றைப் பாதுகாக்க கடல் உயிரின ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுகின்றனர்.
 

கடல் ஆமைகளைப் பிடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக பல அரசுகள் அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment