Wednesday 17 October 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 18


மயூரநாதர் கோவில்



1788ம் ஆண்டு   ஆங்கிலேயர் ஒருவரால் வரையப்பட்ட  லாகடம் (துலா கட்டம்) 
மாயூரம் துலாகட்டத்தில் துலா ஸ்நானம் 

போன ஞாயித்துக்கிழமை மாயூரம் போனப்ப வழியில தஞ்சாவூர்கிட்ட  காவிரி  ஆறு ஓடுதா இல்ல நிக்குதான்னு புரியல...தண்ணி இருந்ததே தவிர ஓட்டம் தெரியல..மாயூரம் கிட்ட  வரவர வழியில இருந்த கிளையாறுகள், வாய்க்கால்கள் எல்லாமே காய்ந்து போய் கிடந்தன. இந்த சீசன்ல காவிரி கரை புரண்டு ஓடும். 'வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரி'ன்னு பாடிய புலவர் இன்றிருந்தால் எப்படி புலம்பியிருப்பாரோ?

இன்னிக்கு ஐப்பசி 1 ம் தேதி. இன்றிலிருந்து இந்த ஐப்பசி ( துலா மாசம் )  முடிய மாயூரம்  காவிரியில் குளிப்பது ரொம்ப  புண்ணியம் அதுவும் கடைசி நாள் 'கடை முழுக்கு'ன்னு பேரு. அன்னிக்கு கங்கை உட்பட 63  கோடி தீர்த்தங்கள் தங்கள் பாவங்களைப் போக்க மாயூர காவிரிக்கு வருகின்றன.ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.அன்னிக்கு காவிரியில சாமிக்கு தீர்த்தவாரி நடக்கும்போது ஆறு முழுக்க தலைகளாத் தெரியும். நான் ஏழெட்டு தடைவையாவது காவிரியில கடைமுழுக்கு குளியல்  போட்டுருக்கேன்.

சின்ன வயசில ஐப்பசி ஒண்ணாம் தேதின்னிக்கி குழந்தைகளுக்கு, சின்ன பசங்களுக்கு  முழுக்கு காசுன்னு கொடுப்பாங்க.எனக்கு தாத்தா, பாட்டி, மாமா யாருமே இல்லாததால முழுக்கு காசு கிடைக்காது! அம்மா எனக்கு ஒரு ரூபா கொடுப்பாங்க. லாகடத்துல ( துலாகட்டங்கிற பேரு குளிர்ல நடுங்கிகிட்டே சொல்லும்போது   லாகடம்ன்னு ஆயிடுச்சு ) நிறைய திருவிழா கடைகள் வந்திருக்கும். முழுக்கு காசை வச்சுகிட்டு அந்த கடைகள்ல தேவையானதை வாங்கிப்போம்.

ஐப்பசி முழுக்க நகராட்சி பூங்காவுல பொருட்காட்சி  நடக்கும். தினமும் ஏதாவது புகழ்பெற்ற நாடகம் நடக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள்லாம் நாடகம் நடத்தியிருக்காங்க. நான் TKS  சகோதரர்கள் நடத்திய ராஜராஜசோழன், ஔவையார், கப்பலோட்டிய தமிழன் போன்ற எல்லா நாடகங்களையும் பாத்திருக்கேன். M R ராதா டிராமாவுல ஒரு சீன்ல துப்பாக்கியில சுடுவாரு..அப்ப  லைட்  எல்லாம் ஆப்  ஆயிடும். அந்த சீன்ல நான் ரொம்ப பயந்துபோனது இன்னும் ஞாபகம் இருக்கு.

அப்பா முனிசிபல் மேனேஜரா இருந்ததால தினமும் பொருட்காட்சிக்கு போய் நாடக மேடையில ஒரு ஓரத்துல உட்கார்ந்து நாடகம் பார்ப்பேன்.ஐப்பசி மாசம் பொறந்தவுடனே மழையும் வந்துடும். " அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்"ன்னு ஒலிபரப்புவாங்க. மழை கடுமையா இருக்கும். சிலதடவைகள்  புயல் அடிச்சிருக்கு. பல நாடகங்கள் கேன்சலா ஆயிடும். பொருட்காட்சி நடத்துறதால நகராட்சிக்கு ரொம்ப நஷ்டம். அதனால  அப்புறம் பொருட்காட்சி நடக்கவே இல்லை.

முழுக்கு சமயத்துல தினமும் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரிக்காக காவிரிக்கு வரும்போது மிக, மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பர்கள்.
இப்போது அந்தமாதிரி பூ அலங்கார அழகைப் பார்க்கமுடிவதில்லை!
யாராவது போட்டோக்கள் வச்சுருக்காங்களான்னு  தெரியல!

  இந்த வருஷம் காவிரியில தண்ணியே இல்ல ..கூவம் மாதிரி ஆயிடுச்சே...துலா ஸ்நானம் பண்ண மக்கள் வருவாங்களா..... ...இப்படியெல்லாம் யோசிச்சிகிட்டே  திருச்சி திரும்பினேன்.  

2 comments:

  1. have cherished memories of லாகடம் trips...
    I was just thinking about it yesterday when setting up சொப்பு in our golu...
    லாகடம் and golu days in Mayuram are golden years never to be forgotten!!

    ReplyDelete
  2. Have vivid and fond memories of லாகடம் and the shops including so many toys that had been bought and played with :))

    ReplyDelete