Tuesday 2 October 2012

லால் பகதூர் சாஸ்திரி & காமராஜ்

ரஷ்யா சென்றிருந்த  போது லெனின் கிராட் நகரில் ஒரு பாலே டான்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சாஸ்திரிதான் சிறப்பு விருந்தினர். தனது மனைவியுடன் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்த  முதல் முடியும் வரை சாஸ்திரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நெளிந்தபடியே இருந்தார்.

அருகில் இருந்த  நான் கேட்டேன் ஏதாவது அசௌகரியமாக இருக்கின்றதா என்று. அதற்கு அவர் சொன்னார். டான்ஸ் ஆடும் பெண்களின்  கால்கள் எந்தவித உடையும் இல்லாமல் வெறுமனே  இருக்கிறது. மேலும் எனது கண் முன்பாக வந்து ஆடுகிறார்கள். பார்க்கவே சங்கோஜமாக இருக்கிறது. அதிலும் அம்மாவை (மனைவியை ) அருகில் வைத்துக் கொண்டு பார்க்க ரொம்ப தர்மசங்கடமாக இருக்கிறது என்றார்.


அதேபோல மும்பையில் ஒருமுறை கமல் அம்ரோஹி, படப்பிடிப்புத்தளத்தில் சாஸ்திரிக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதில் அப்போது உச்சத்தில் இருந்த  நடிகையான மீனா குமாரி கலந்து கொண்டிருந்தார். அவர்தான் சாஸ்திரிக்கு மாலை போட்டு வரவேற்று அழைத்துச் சென்றார். சாஸ்திரியைப் பாராட்டி சின்ன உரையும் நிகழ்த்தினார். அப்போது மீனா குமாரியையே குறுகுறுவென்று பார்த்த சாஸ்திரி என்னைத் தனியாக அழைத்தார். ஆமாம் இப்போது பேசுகிறாரே அந்தப் பெண் யார் என்று கேட்டார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவர்தான் மீனா குமாரி. இந்தியாவின் உச்ச நடிகை என்றேன். அப்படியா என்று கேட்டுக் கொண்டார் சாஸ்திரி.



பின்னர் சாஸ்திரி பேச எழுந்தார். அப்போது, எனக்கு மீனா குமாரியின் பெயரை இதுவரை தெரியாது. இப்போதுதான் எனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக கேள்விப்படுகிறேன். அனைவரும் மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறியபோது அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர்.








- குல்தீப் நாயர் எழுதியுள்ள “பியான்ட் தி லைன்ஸ்” என்ற புத்தகத்திலிருந்து





 காமராஜ் 




 காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார்.

" அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். " யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார்.



இறுதிவரை வாடகை வீட்டில் தங்கியிருந்த காமராஜர் மறைந்த போது அவரிடம் பத்து கதர் சட்டைகள், வேட்டிகள் மற்றும் பணமாக ரூபாய். 100 மட்டுமே இருந்ததாம்.


இப்படிப்பட்ட  தலைவர்கள் இருந்தார்கள் என்பதே இளைய சமுதாயத்திற்கு தெரிய வாய்ப்பில்லை -

இவர்கள் போன்ற தலைவர்கள் இந்தியாவை வழி நடத்த இறைநிலையை  வேண்டுவோம்.






No comments:

Post a Comment