Thursday 20 December 2012

டிசம்பர் 21 2012-ல் உலகம்




உலக அழிவு பற்றித்தான் இன்றைக்கு ஊடகங்களில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. இணையதளங்களில் அதிக அளவில் தேடியது உலக அழிவு பற்றிய செய்திகளாகத்தான் உள்ளது. இந்த நிலையில் சீனா நாட்டில் இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று பல்வேறு ஊர்களில் பொதுச் இடங்களில் கூடி சிலர் பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சீனா நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் உள்ளனர். மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் கூற்றுப்படி இந்த மாதம் உலகம் அழியும் என்று இந்தப் பிரிவினர் நம்புகின்றனர். இதனை இணையத்தில் பரப்பி பீதியை கிளப்பி வருகின்றனர். ஆங்காங்கே பொது இடங்களில் கூடி பிரசங்கம் செய்து வருகின்றனர். அவர்களை எச்சரித்த போலீசார் கலைந்து போகும் படி அறிவுறுத்தியுள்ளனர். ஒரு சிலரை கைதும் செய்துள்ளனர்.

ஹாங்காங் நகரில் இந்த காரணத்துக்காக 57 பேர் துசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. உலக அழிவு பற்றி பிரச்சாரம் சீனாவில் மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

நாளை (21ம் தேதி) உலகம் அழியும் என பரவி வரும் தகவல் காரணமாக, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த வியாபாரி ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து, மக்களுக்கு விநியோகித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலகம் தோன்றியதில் இருந்து பல்வேறு காலண்டர் முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவற்றில் ஆதிகாலம் தொட்டு மாயன் காலண்டர் பின்பற்றப்பட்டு வந்தது. மாயன் காலண்டரில் 21-12-2012 தேதிக்கு பின்னர் தேதி பொறிக்கப்படவில்லை. எனவே அன்றைய தினத்துடன் உலகம் அழிந்து விடும் என்ற கருத்து கடந்த சில திங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவியது. இது ஒரு சிலரிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.

பணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.

இரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.

இந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், 

“வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.

விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.

உலக மக்களின் தேவைக்காக சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மின்சாரத்திற்காகவோ, குடிநீருக்காகவோ எதிர்காலத்தில் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு மனித உடலின் செல்லில் இருந்து அல்லது மிருகத்தின் ஒரு செல் அணுவில் இருந்து குளோனிங் முறை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகள் சோதனையாக மட்டுமே உள்ளது. இதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். ஆகவே இது ஆய்வுடன் நின்று விட்டது.

பூமி வெப்பமாவதை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மாசு கட்டுப்பாடு செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்…” என்றார்.






No comments:

Post a Comment