Saturday 2 March 2024

மகரிஷி அவர்களுடன்........15

1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியப் பயிற்சியில் கலந்துகொள்ள மாலாவோடு சென்றிருந்தேன். ஆழியார் அறிவுத் திருக்கோயில் திறக்கப்பட்டு நடைபெறும் முதல் ஆசிரியப் பயிற்சி, இந்தப் பயிற்சியிலிருந்துதான் சான்றிதழ் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. மூத்த ஆசிரியர்களெல்லாம் தங்களுக்கு இதுபோல் அழகான சான்றிதழ் கிடைக்கவில்லையே என் ஆதங்கப்பட்டார்கள் ( 1990க்கு முன் பயிற்சி எடுத்தவர்கள் பெயர்கள் பேரேடுகளில் எழுதி வைக்கப்படும் ). மகரிஷி அவர்கள் " இந்த சான்றிதழினைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் இதற்கு மிகவும் மதிப்பு உண்டாகும் " எனப் பயிற்சி முடித்தவர்களிடம் சொன்னார்கள்.

இப்பயிற்சியின்போது மகரிஷி அவர்களுடன் முக்கால் மணி நேரத்திற்கும் மேல் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அமெரிக்கா யக்காவேலி ஆசிரமத்தில் தொண்டாற்றிக்கொண்டிருக்கும்போது நிகழ்ந்த சில சம்பவங்களை எங்களிடம் கூறினார்கள். அதிலொன்று இங்கே பதிவிடுகின்றேன் -

யக்காவேலி ஆசிரமம் பாலை நிலத்தில் அமைந்துள்ள ஓர் இடம். Mental Physics என்ற பெயரில் ஆன்மீகத்திற்கென அமைக்கப்பட்ட இந்த இடத்தில் பல்வேறு அமைப்பினர் தியானத்திற்கென கூடுவார்கள். 1987ம் ஆண்டு மகரிஷி அவர்கள் இந்த ஆசிரமத்தில் தொண்டாற்றிக்கொண்டிருக்கும்போது விண்வெளியில் இயற்கை நிகழ்வு ஒன்று வெகு சீக்கிரம் நடக்க இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்திலிருந்தனர். அதாவது பூமியின் ஒரு பக்கம் கோள்கள் அதிகம்  நேர்கோட்டில் வருவதாலும் எதிர்புறம் ஒரு கோள் மட்டும் இருப்பதாலும் ஈர்ப்பு சக்தியினால் உலகின் பல நாடுகளில் பாதிப்பு ஏற்படும், குறிப்பாக அமெரிக்கா பாதிக்கப்படும் என பல செய்திகள் பரவியிருந்தன. போதாக்குறைக்கு அமெரிக்க ஜோதிடர்களும் அதிக பயம் காட்டிவிட்டினர்.

இத சமயத்தில் யக்காவேலி ஆசிரம அமைப்பினர் எல்லா தியான குழுக்களையும் கூப்பிட்டு கூட்டு பிரார்த்தனை நடத்த அழைத்திருந்தார்கள். நம் மகரிஷி அவர்களுக்கு இந்நிகழ்வின் தலைமைப் பொறுப்பு தரப்பட்டது. மகரிஷி அவர்கள் " பஞ்சபூத - நவக்கிரக " தவத்தின் விளக்கம் தந்து தவத்தினையும் நடத்தினார்கள். ஒவ்வொரு கிரகத்திலிருந்து காப்பு பெறுகின்றோம், அவை நமக்கு நன்மையே அளிக்கட்டும்  என்று சொன்னபோதெல்லாம் அங்கு கூடியவர்களிடம் பெரிய நிம்மதி.

வந்திருந்தவர்களெல்லாம்  மிக நிறைவாக மகரிஷிக்கு நன்றி கூறிச் சென்றார்களாம். ( ஏற்பட்ட இந்த இயற்கை நிகழ்வால் எங்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை )

இன்னொரு நிகழ்வு அடுத்த பதிவில் -        


To read    மகரிஷி அவர்களுடன்........14   click   HERE

To read    மகரிஷி அவர்களுடன்........13  click   HERE

To read    மகரிஷி அவர்களுடன்........12  click   HERE

To read    மகரிஷி அவர்களுடன்........11   click   HERE

To read    மகரிஷி அவர்களுடன்........10   click   HERE

To read    மகரிஷி அவர்களுடன்........9    click   HERE

             



                                                                                                               


No comments:

Post a Comment