Thursday 23 November 2023

மகரிஷி அவர்களுடன்...........10

2002ம் ஆண்டு ஆழியாரில் மகரிஷி அவர்களுடன்  இருபது நிமிடங்கள் பேச வாய்ப்பு கிட்டியது. 

" தாங்கள் எழுதிய அத்துனை கவிதைகளும், கட்டுரைகளும் அச்சில் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம் " என அவரிடம் வேண்டியபோது 

" சென்னையில் சங்க அலுவலகம் மூன்று முறைக்கு மேல் இடம் மாற்ற  வேண்டிய சூழ்நிலை. அப்போது சில கவிதைகள், கட்டுரைகள் காணாமல் போய்விட்டது. அன்பொளியில் எல்லாவற்றையும் கொடுத்துவிட முயற்சித்தேன். அன்பொளியும் சில காலம் வெளிவராமல் இருந்ததினால் சில கவிதைகள், கட்டுரைகள் தாள்களில் எழுதப்பட்டு அவற்றில் பல இல்லாமல் போய்விட்டது. சுதேசமித்திரன் நாளிதழில் சில கவிதைகள், கட்டுரைகள் பிரசுரமாயுள்ளன. அவற்றினைத் தேடி எடுக்க கன்னிமரா நூலகம் செல்லவேண்டும் " என வருத்தத்தோடு கூறினார்.

" பேராசிரியர் இருசு பிள்ளை அவர்கள்  எழுதிய புத்தகங்களுக்கு மதிப்புரை, வாழ்த்துரை தந்துள்ளேன் " என மேலும் கூறினார். 

Pera IrusuPillai & Mala ( 20-11-13 )

பேராசிரியர் இருசு பிள்ளை அவர்கள் மகரிஷி அவர்களின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். சிறந்த தமிழ் அறிஞர். கோவையில் மனவளக்கலை  பரவ அருந்தொண்டாற்றியவர். தமிழ் நூல்கள்  பல எழுதியுள்ளார். வானொலியில் சொற்பொழிவு நிறைய முறை ஆற்றியிருக்கின்றார்.மாலாவிடமும், என் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர். அவர் மகன் திருச்சியில் வேலை பார்த்தபோது அடிக்கடி திருச்சி வருவார். இங்கு வரும்போதெல்லாம் அவர் தினமும் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுக்கு பல்வேறு தவ விளக்கங்களையும், மகரிஷி அவர்களோடு அவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். 

மகரிஷி அவரது நூலுக்கு எழுதிய வாழ்த்துரை பற்றி கேட்டதற்கு " நான் கோவை சென்றவுடன் அதனை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் " என உறுதி அளித்தார். சொன்னபடியே "எண்ணுக நல்லன "என்ற புத்தகத்திற்கு மகரிஷி அளித்த அந்த வாழ்த்துரையினை அனுப்பி வைத்தார். அதனைக் கீழே கொடுத்துள்ளேன்:



இருசு பிள்ளை ஐயா அவர்கள் அவ்வப்போது அலைபேசியில் பேசி எங்களை வாழ்த்துவார். 2020ம் ஆண்டு அவரைத் தொடர்பு கொண்டு " கோவையில் தங்களை சந்திக்கின்றேன். தாங்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் எங்கள் அறிவுத்திருக்கோயில் நூலகத்திற்கு தேவை " என வேண்டியபோது " எல்லா புத்தகங்களையும் எடுத்து வைக்கின்றேன். வாருங்கள்" எனக் கூறி எங்களை மனங்குளிர வாழ்த்தினார். 

 கொரானா ஊரடங்கு காரணத்தினால் ஓராண்டிற்கு மேலாக கோவை செல்ல முடியவில்லை. இந்த சமயத்தில் அவரது மறைவு செய்தி கிடைத்தது. நாங்கள் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை.

வாழ்க பேரா. இருசு பிள்ளை ஐயா புகழ்!

இந்த ஞானவயல் வலைப்பூவின் 6500வது பதிவினை பேரா.இருசு பிள்ளை அவர்களுக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கின்றேன்.






 " 


No comments:

Post a Comment