Showing posts with label கிழமை. Show all posts
Showing posts with label கிழமை. Show all posts

Monday, 15 September 2014

கிழமைகள் சார்ந்த சடங்குகள் பற்றி ......3


ராகுகாலம்     - தினமணி கதிர் 7-9-14 இதழிலிருந்து 

எல்லாச் செயல்களையும் நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். அப்போதுதான் நன்மைகளுடன் நல்வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்றவற்றை நல்ல யோகமான நேரமாகச் சொல்வார்கள். ""பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது'' என பழமொழி சொல்லி புதன்கிழமைகளில் நல்ல காரியங்களைச் செய்வார்கள். மங்கள வாரம், சுக்கிர வாரம்... இப்படி ஒரு கிழமைக்கும் ஒரு வாக்கு உண்டு!

 இப்படி எல்லா நேரத்தையும் புகழ்கிறவர்கள் ராகு காலத்தை நினைத்தால் பயப்படுவார்கள்!  ஆனால், உண்மையில் ராகு காலம்தான் சிறந்த பரிகார காலம். வருத்தப்படுபவர்களுக்கு வளம் தரும் கற்பக விருட்சமாகவும், இருட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாகவும், துக்கத்தில் இருப்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பது இந்தக் காலம்தான்!

ராகு காலத்தின் பெருமையைப் புரிந்து கொள்பவர்கள் அறிவாளியாக இருந்தால், அந்தக் காலத்தைத் தனக்கு லாபம் தரும் விதத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ராகு காலத்தை "அமிர்த காலம்' என்று சொல்வார்கள். அமிர்தம் எப்படி அதை அருந்தியவர்களுக்குப் பூரண ஆயுளைத் தருகிறதோ, அதுபோல ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகள் புண்ணியத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன. ராகுவைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை நினைப்பதே புண்ணியம் என்று சொல்லப்படுகிறது.

ராகு காலத்தில் பூஜை செய்யலாமா? அதிலும் குறிப்பாக எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா? என்றெல்லாம் நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும்.

 ஹோமங்கள் பற்றிய எல்லா விஷயங்களும் வேத நூல்களில் இருந்தாலும் பரிகார பூஜைகள் பற்றிய தகவல்கள் பழமையான ஜோதிட நூல்களிலேயே உள்ளன.

 ராகு காலத்தில் எல்லா பூஜைகளையும் செய்ய முடியாது. பரிகார பூஜைகளை மட்டும்தான் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். ராகுகாலம் சிறந்த பரிகார காலம் என்று அதில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ராகு காலம் நல்ல நேரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கஷ்டத்தில் இருந்துகொண்டு பரிகாரம் தேட நினைப்பவர்களுக்கு ராகு காலம் மிக உகந்த நேரம்!

சத்ரு உபாதைகள் தீர்வதற்கு எலுமிச்சம்பழம் உகந்தது. துர்க்கைக்கு இந்தப் பழம் மிகவும் விசேஷமானது. துர்க்கைக்கு இதை மாலையாகவும் சாத்தலாம். எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றும் பழக்கமும் காலங்காலமாக இருக்கிறது. திருவாரூரில் ஸ்ரீதியாகராஜர் கோயிலினுள் இருக்கும் ராகுகால துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றும் பழக்கம் 1000 ஆண்டுகளாக இருந்து வருகிறது!

 ராகுவுக்கு உடலில்தான் விஷம். ஆனால் நாக்கில் அமிர்தம் இருக்கிறது!

("அர்த்தமுள்ள ஹோமங்கள்' என்ற நூலில் "வித்யாவாரிதி' சுப்ரமணிய சாஸ்திரிகள்)

Tuesday, 26 August 2014

கிழமைகள் சார்ந்த சடங்குகள் பற்றி ......2

Concluding part...
ராகுகாலம்


ராகு காலம் பற்றித் தெரிந்து கொள்ளுமுன்  ராகு, கேது எனும் நிழல் கிரகங்களைப் பற்றி சிறிது அறிவோம்  - 

பூமி வருடம் ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகின்றது. சந்திரனோ 29 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றிக்கொண்டே  சூரியனைச் சுற்றி வருகின்றது. பூமி, சந்திரன், சூரியன் இவைகளின் இயக்கங்களை ஒட்டி 
அமாவாசை, பௌர்ணமி, கிரகணங்கள் ஏற்படுவது பற்றி பள்ளியில் படித்துள்ளோம். 






















சூரியனைச் சுற்றும் சந்திரனின் பாதை எப்படி  இருக்குமெனப் பார்த்தால் ஒரு ஜாங்கிரி  போலத் தோன்றும். இப்பாதையை சூரியனின் தோற்றப்
 ( apparent path ) பாதையின் மீது வைத்துப் பார்த்தால் பாம்பு போல வளைந்து
 ( sine wave ) தெரியும். இந்த வளைவின் ஆரம்பப் பகுதி அல்லது தலை பகுதி 'ராகு' எனவும் வால்  பகுதி 'கேது' எனவும் அழைக்கப்படுகின்றது
( ascending  & descending  nodes ).

சூரியனிலிருந்து இருபுறமும் வெளிப்படும் கண்ணுக்குப் புலப்படாத கருப்பு நிற காந்தப் பாதைகளை ஒரு புறம் ராகு என்றும் மறுபுறம் கேது என்றும் மகரிஷி கூறுவார்கள்.

சூரியனிலிருந்து வெளிப்படும் காந்த அலைப்பாதைகளான ராகு, கேது எனப்படும் நிழல் கிரகங்களுக்கு நேர்ப்பாதையில் பூமி, சந்திரன் வருகின்றபோது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இந்த நிழல் காந்த அலைகளினால் ( ராகு, கேது ) சூரிய ஒளி  மற்றும் சந்திர ஒளி பாதிக்கப்பட்டு நம்  பூவுலகில் ரசாயன மாற்றங்கள் மிக அதிகமாகின்றது. இதனால் நம் உடலிலும், மற்ற உயிரினங்களிலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.  இதனால்தான் ஜாதகங்களிலும் இந்த நிழற் கிரகங்கள் இடம் பெற்றன.

சில பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே கிரகண காலத்தில் சாப்பிடக்கூடாது, உடலுறவு கூடாது, சுப காரியங்கள் கூடாது என்றனர். அதே நேரத்தில் உண்டாகும் ரசாயன மாற்றங்கள் மனதிற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதைக் கண்டு கிரகண நேரத்தை ஆன்மீக சாதனைகள் செய்வதற்கு சிறந்த நேரமாக அமைத்தனர். கிரகண நேரத்தில் செய்யப்படும் தியானங்கள், பூஜைகள், மந்திர வழிபாடுகள் பலமடங்கு அதிக பலன்கள் தருவதாகக் கண்டனர். கிரகண நேரத்தை விரத நேரமாக அனுஷ்டிக்கச் செய்து  ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்தனர். 

(கிரகண நேரத்தில் வயிறு காலியாக இருந்தால், வான்காந்த ஆற்றல் நமக்கு அதிகமாகக் கிடைக்கும்)

கிரகணத்தின்போது கிடைக்கும் இந்த நன்மைகள் தினம்தோறும் ஏற்படுகின்றதா  என்ற ஆராய்ச்சியில் மூழ்கிய நம் முன்னோர்கள் கண்டுபிடித்ததுதான் ராகுகாலம். ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்திற்கு கிரகண சாயை உள்ள ஒரு நேரம் உள்ளதாக  உணர்ந்தார்கள். இந்த கிரகண சாயை  உள்ள ஒன்றரை மணி நேரம் ஒவ்வொரு நாளும் ஒரு வரிசைக்கிரமத்தில் அமைந்து, இந்த வரிசைக்கிரமம் ஏழு நாட்களுக்கு ஒருமுறை அதே வேளைகளில் வரிசையாக அமைவதையும் கண்டனர். 

கிரகண நேரத்தில் செய்யக்கூடிய ஆன்மீக சாதனைகளை, இந்த கிரகண சாயல் உள்ள நேரத்தில் செய்தால் அதே போன்ற நன்மைகள் விளைவதைக் கண்டனர். இந்த கிரகண சாயை நேரத்தைத்தான் " ராகு காலம் " எனப்பெயரிட்டு ராகுகாலப் பூஜைகளையும், விரதங்களையும் ஏற்படுத்தினர். 

ராகுகால நேரத்தை ஆன்மீக முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் வீணாக்கியதைக் கண்டு ராகுகாலத்தில் லௌகீக வாழ்க்கைக்கான  சுப காரியங்கள் செய்யக்கூடாது, அப்படி மீறி செய்தால் நன்மைகள் விளையாது எனப் பயமுறுத்தினர். இதனால் வேறுவழியின்றி மக்கள் இந்த நேரத்தில் பூஜையிலும், தியானத்திலும் ஈடுபடுவார்கள் என நம்பினர். 

ஆனால் நடந்ததோ - ராகுகாலத்தில்  எதையம் செய்யக்கூடாது என்ற மூடநம்பிக்கை வளர்ந்து இன்று ராகுகாலம் என்பது இயலாமைகளுக்கும், சால்ஜாப்புகளுக்கும், சமாளிப்புகளுக்குமே பயன்படுகின்றது. 

இன்றைய தினம் என்ன கிழமை என்பதே உறுதி செய்யப்படாத நிலையில் கிழமையைக்கொண்டு கடைப்பிடிக்கப்படும் ராகுகால நேரம் உண்மையில் சரிதானா என்பதை யார் உறுதிபடுத்த முடியும்..!

இதே வாதம்தான் எமகண்டம், ஹோரை, குளிகை, சூலை போன்ற நேரங்களுக்கும்..!


( 1999ம் ஆண்டு வெளியிடப்பட்ட  இக்கட்டுரை பல விமர்சனங்களைக் கண்டது!).


(1000th  POST  OF  2014!)

Friday, 22 August 2014

கிழமைகள் சார்ந்த சடங்குகள் பற்றி ......1


எல்லோருக்குமே ஜோதிடத்தில் ஆர்வம் இருப்பதால் மேலும் சிந்தனையைத் தூண்ட கீழ்கண்ட   கட்டுரையை ( சுருக்கப்பட்டுள்ளது ) செப்டம்பர் 1999ல் வெளியிட்டேன்.

நிறைய கடிதங்கள்  இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தன.

15 ஆண்டுகளுக்குப் பிறகு எனது blog ல்   வெளியிடுகின்றேன். படிப்பவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் இது பற்றி மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

கிழமையைக்  கொண்டு கணிக்கப்படும்  ராகுகாலம், எமகண்டம், குளிகை,  சூலை, ஹோரை போன்ற பலவற்றைப்  பெரும்பாலோனோர் பின்பற்றி வருவதைக் காண்கின்றோம். குறிப்பாக ராகுகாலத்தில் நல்ல காரியங்கள் துவங்கக்கூடாது என்பதைக் கடைபிடிப்பவர்கள் ஏராளம். இதில் அர்த்தம் உள்ளதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளுமுன் கிழமை பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

கிழமை எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என ஆராயும்போது சில அறிய தகவல்கள் கிடைத்தன. இராமாயணத்தில் ராமர் ஜனனத்தை ஜாதக சுத்தமாகக் குறிப்பிடும் வால்மீகி, ராமர் பிறந்த கிழமையைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. மகாபாரதத்தில் வேத வியாசரும் கிருஷ்ணர் பிறந்த நேரம், நட்சத்திரம், திதி, லக்னம் இவற்றை விரிவாகச் சொன்னாலும், கிருஷ்ணர் பிறந்த கிழமையைக்  குறிப்பிடவே இல்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில்
வாழ்ந்த வான சாஸ்திர விற்பன்னர் பாஸ்கராச்சாரியாரின் சுலோகம் ஒன்றிலிருந்துதான் கிழமை துவங்கப்பட்ட வரலாற்றினைத் தெரிந்து கொள்கின்றோம். அவர் கூற்றுப்படி கலியுகம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது.
அதற்கு முன் கிருஷ்ணர் காலத்தில், ராமர் காலத்தில் கிழமை வழக்கத்தில்
இல்லை எனப் புரிந்து கொள்ளலாம் ( கலியுகம் வியாழன் மாலை துவங்கியது என்ற வாதமும் உள்ளது ). இப்போதுள்ள கலியுகம் துவங்கி 5114 ஆண்டுகள் முடிந்துவிட்டன. கலியுகம் முடிவதற்கு இன்னும் 4,26,876 ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் கலி முற்றிவிட்டது என புலம்புகின்றோம்.

பூமி தோன்றி 4 1/2 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என நிபுணர்கள் கூறுகின்றனர். ( 1 பில்லியன் - 1,000,000,000 ஆண்டுகள் ). நமது சூரியன் தோன்றி 6.254 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிட்டுள்ளார்கள். தற்போதைய கலியுகம் வெள்ளிக்கிழமை துவங்கியதாக எடுத்துக் கொண்டு கடந்த 5124 ஆண்டுகளை ஆராயும்போது ஏழு கிழமைகள் கொண்ட வாரக் கணக்கு பூமியில் பலப்பல இடங்களில் பல்வேறாக பயன்படுத்தப்பட்டு  அவ்வப்போது மாற்றங்களும், சீர்திருத்தங்களும் செய்யப்பட்டு வந்துள்ளது. நமது நாட்டில் பாஸ்கராச்சாரியாரும், ஆரியபட்டரும் சில மாற்றங்களை செய்துள்ளனர்.

ஜூலியஸ் ஸீசர் காலண்டரில் ஏற்பட்ட சில தவறுகளைச் சீர் செய்ய கி.மு.49 ஆண்டினை 445 நாட்கள் கொண்ட   குழப்ப ஆண்டாக அறிவித்தார் ( Year of Confusion ).

உலகம் முழுதும் காலனிகள் அமைத்து ஆண்ட ஆங்கிலேயர்கள் எல்லா இடங்களிலும் ஒரே கிழமை, ஒரே தேதி  பின்பற்ற பலமுறைகள் காலண்டர்
சீர்திருத்தம் செய்துள்ளனர். மேலும் ஏற்பட்ட குறைகளைக் களைந்து புதிய காலண்டரை அமைத்தவர் போப் கிரிகோரி. இவர்  1582ம் ஆண்டு அக்டோபர்  4ம்  தேதிக்குப் பிறகு 15ம் தேதியாக அமைத்தார். இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் காலண்டர் கிரிகோரி காலண்டரே.

கலியுகம் துவங்கியது  வெள்ளியா அல்லது வியாழனா என்ற  சர்ச்சையே இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 5124 ஆண்டுகளில் பலப்பல தடவைகள் இக்கிழமை வரிசைகள் மாற்றப் பட்டுள்ளதாக அறியப் படுகின்றது.   1-9-2014  அன்று ஞாயிற்றுக் கிழமை வருகின்றது. அன்று உண்மையிலேயே ஞாயிற்றுக்கிழமைதானா அல்லது வேறு கிழமையா என்று உறுதிபடுத்த யார் உள்ளார்கள்!  

எனவே கிழமை ஒட்டிய பழக்கங்கள், சடங்குகள் உண்மையில் தேவைதானா....சிந்திக்க வேண்டுகின்றேன்!

அடுத்து ராகுகாலம் பற்றி.....

- தொடரும்