Wednesday 6 July 2022

பணம்

 


பணம் என்னடா பணம் பணம் !,குணம் தானடா நிரந்தரம்", என்றும், 

" பாசம் மட்டும் போதும் பெண்ணே காசு பணம் என்னத்துக்கு? " என்று 

சினிமாவிற்கு சிலர் பாட்டெழுதியது, பாடியது, நடித்தது எல்லாமே பணத்துக்காகத்தான்.


பணக்காரனாக வேண்டுமா ? அதற்கு செல்வத்தை குவிக்க வேண்டிய
அவசியமில்லை ! தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.

முட்டாள் மேலும் மேலும் பணத்தை தேடிக்கொண்டிருப்பான். அறிவாளி, 
இருக்கும் கொஞ்ச பணத்தையும் அனுபவித்துக்கொண்டிருப்பான்.

பானையில்  சோறிருக்கும்வரை, கூரையில் காக்கை கூட்டத்திற்கு 
குறைவில்லை.  கையில் பணமிருக்கும் வரை, உறவு கூட்டத்திற்கும் 
பஞ்சமில்லை.

பணக்காரனின் ஜலதோஷம் ஊருக்கெல்லாம் தெரிய வரும். ஏழை
 இறந்துபோனால்  கூட யாருக்கும் தெரியாது.

பணம் என்ற பாஸ்போர்ட் உங்கள் கையில் இருக்குமானால் 
சொர்க்கத்துக்குகூட வெகு சுலபமாக சென்று விடலாம்.

கண்ணில் பட்ட பொருளை எல்லாம் வாங்கும் பழக்கமானது, முடிவில்
தேவையான  பொருளைக்கூட விற்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டு
விடும்.

பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணமில்லாவிட்டால் 
உன்னை யாருக்குமே தெரியாது.

பிறக்கும்போது மூடிய கைகளோடு பிறக்கிறோம். இறக்கும்போது 
திறந்த கைகளோடு  போகப்போகிறோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட
காலத்தில் நமக்கு கிடைப்பது எல்லாமே லாபந்தான்.

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே, அவனை உயர்த்தி பேச
 மனிதர் கூட்டம் என்றும் தப்பாதே ! என்ன அறிவு இருந்திட்டாலும் 
பணமில்லாத ஆளை, ஒரு மனிதனாக உலகம் என்றும் மதிக்க மாட்டாதே.

கருவறையிலிருந்து வெளிவருவது முதல் கல்லறைக்குள் போய் 
அடங்குவதுவரை, சில்லறையை வெட்டினால்தான், எந்த ஒரு காரியமும் 
நடக்கும் என்பது எழுதாத நீதியாகிவிட்டது.!.

பணத்தை சேமிப்பதென்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவதை 
போன்றது. பணத்தை செலவழிப்பதென்பது, குண்டூசியால் பலூனை 
உடைப்பது போன்றது !

No comments:

Post a Comment