Sunday 24 July 2022

சரியான குரு யார் ?

தயு மற்றும் யுதாங் என்ற இரு ஜென் குருமார்களைத்தேடி தலைமைத் தளபதி ஒருத்தர் வந்தார். தன்னைச் சீடனாக ஏற்க்கும் படி கோரினார்.

      "இயல்பிலேயே நீ புத்திசாலியாகத் தெரிகிறாய் அதனால் நல்ல சீடனாக இருப்பாய்" என்றார் யுதாங்.

      "இவனா? அடிமுட்டாளாகத் தெரிகிறான்? இந்த முட்டாளுக்கு மண்டையில் அடித்துச் சொன்னால் கூட ஜென்னைப் புரிய வைக்க முடியாது" என்றார் தயு.

      தன்னை ஏளனமாகப் பேசிய தயுவையே தன் குருவாக எற்றார் அந்தத்தளபதி.

      பொதுவாக உங்களின் அகங்காரத்தைக் கேள்வி கேட்காதவரே உங்களின் உற்றவராக இருக்க முடியும். உங்களின் குறைபாடுகளை ஆதரிப்பவரே நண்பராக ஏற்றுக்கொள்ளப்படுவார். ஆனால் குரு என்பவர் உங்களின் முட்டாள்த்தனங்களை ஆதரிக்க வரவில்லை. அவர் உங்களின் வரயறைகளைத் தகர்க்க வந்தவர்.

      செளகரியமாக உணர வேண்டுமானால், அதற்கு தோழர்களைத்தேடிப் போகலாம், அல்லது திருமணம் செய்துகொள்ளலாம். எதற்க்காக குருவை நாடி வந்தீர்கள்? யாருடன் இருக்கையில் முகமூடி கிழிக்கப் பட்டது போல் மிகவும் அசெளகரியமாக உணர்கிறீர்களோ, அந்த நிலையிலும் யாரைவிட்டு தப்பித்து விலகப் பிரியமில்லாமல் மறுபடி நாடிப்போகிறீர்களோ, அவர்தான் உங்கள் குரு.

      "நீங்கள் அற்புதமானவர், புத்திசாலி" என்று எல்லாம் புகழ்ந்து பேசி, உங்கள் அகங்காரத்துக்கு தீனி போடுபவர், உங்களிடம் ஆதாயங்களை  எதிர்பார்த்து நிற்பவர்.

      முகத்துக்கு நேராக உங்கள் வரையரைகளை சுட்டிக்காட்டி, உங்கள் அகங்காரத்தை சதா தகர்த்துக்கொண்டு இருப்பவர் தான் குரு. உங்கள் குறைகளை சுட்டிக்காட்டினால், உங்கள் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகளாம். வெகு சீக்கிரத்தில் எதிரியாகவே கருதப்படலாம். ஆனால் அதைப்பொருட்படுத்தாது அளவற்ற கருணையுடன் உங்களுடைய குறைபாடுகளை எடுத்துச் சொல்லி, அவற்றைக் கடந்து நீங்கள் பயணம் செய்ய உதவி செய்வதே குருவின் உண்மையான நோக்கம். அவர் உங்களுக்கு உபச்சாரம் செய்ய வரவில்லை. உங்களை மேன்மை நிலைக்கு எடுத்துச் செல்ல வந்திருக்கின்றார்.

      தன்னைப் பாராட்டிப் பேசிய யுதங்கைவிட, தன் பதவியைப் பற்றி கவலை கொள்ளாது தன்னை ஏளனம் செய்த தயுவையே குருவாக தலைமைத் தளபதி ஏற்றதில் அவரது புத்திசாலித்தனம் மிளிர்கிறது.

No comments:

Post a Comment