Monday, 4 August 2025

மன்னிப்பு



சந்தோஷத்தை,

சஞ்சலத்தை,

சிலிர்ப்பை

என்று ஏதோ ஒன்றை தருவதாக...

முதல் தவறு மட்டும்

அச்சத்தையும்,

முதல் மன்னிப்பு கோரல்

வெட்கத்தையும் தருவதாக...

மன்னிப்பு கோரலுக்கு பயந்தே,

பல தவறுகள் கருவிலேயே இறந்துவிடுகிறது,

பிறகு எல்லாம்

பழகி விடுகிறது.

செய்வதற்கு எந்த தவறும்

கேட்பதற்கு எந்த மன்னிப்பும்

குற்ற உணர்வு தருவதில்லை...

அப்புறம் பார்த்துக்கலாம்

என்கிற மனநிலை இருக்கிற வரை

தவறுகள் தொடரும்...

கடவுளே எத்தனை

பெரிய தவறுக்கும்

பாவமன்னிப்பு தரும்போது...

மனிதர்கள் மீதான அச்சம் எதற்கு?

மன்னிப்பு கேட்கிற

எத்தனை பேருக்கு -

பாதிக்கப்பட்டவரின் மனநிலை புரியும்...

ஆனாலும்

தவறு செய்யாமல்

இருக்கப்போவதில்லை...

மன்னிப்பு கோராமலும்

இருக்கப்போவதில்லை...

எல்லாமே பாவனையாக,

மன்னிப்பு கேட்டு, கேட்டு...

மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -

மன்னிப்புக்கு மரியாதை

இல்லாமல் போனது...

மன்னிக்கப்படுவோம்

என்பதாலேயே பல

தவறுகள் செய்கிறோமோ...

ஒரு நொடிப் பொழுதில்

விழும் அடி,

ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே

என்பதை உணர்வதில்லை...

யாரோ ஒருவரின் தவறால் -

நான் பாதிக்கப்படும் போது,

தவறின் வீச்சு புரிகிறது...

மன்னிக்க முடியாத

இயலாமையும் பிடிபடுகிறது...


கண்ணதாசன்.

No comments:

Post a Comment