Tuesday 13 May 2014

நட்பு....6

  நல்லவர் நட்பு எப்படிப் பட்டது, தீயவர் நட்பு எப்படிப்பட்டது என்பதைச் சிவப்பிரகாசர் பின்வரும் பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செயும்கேண்மை ஆகாதே - நல்லாய்கேள்
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்
போய்முற்றின் என்ஆகிப் போம்
(38)


(கேண்மை = நட்பு, அல்லார் = நண்பர் அல்லாதவர். ஆகாது = உதவாது, நல்லாய் = பெண்ணே)

காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும். இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும். இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாடலில் நல்லவர் நட்பிற்கு உவமையாகக் காய் முற்றி, கனி ஆவதையும் தீயவர் நட்பிற்கு உவமையாக இலை முற்றி, சருகு ஆக மாறுவதையும் உணர்த்தியுள்ள பாங்கு உணர்ந்து இன்புறத்தக்கது. நட்பு என்பது ஒன்று. அதில் நன்மை தருவது ஒருவகையாகவும் தீமையைத் தருவது இன்னொரு வகையாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். அது போன்றே செடி என்பது ஒன்று தான். அதில் உள்ள காய் முற்றினால் கனியாகப் பயன்தருகிறது. அதில் உள்ள இலை முற்றினால் சருகாகிப் பயனற்றுப் போகிறது என்று ஒரே பொருளை அடிப்படையாகக் கொண்டு உவமை அமைத்துள்ள தன்மையைக் காணமுடிகிறது.          

No comments:

Post a Comment