கல்லோடு ஆயினும் சொல்லி அழு..!!
ஒரு சிலா் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறாா்கள்...!
ஆனால் இன்னும் சிலா், "சாமியாவது, பூதமாவது, நடக்குறதுதான் நடக்கும் என்கிறாா்கள்".
எது சாி?
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன். இதே கேள்வியைக் கேட்டான்.
ஆதிசங்கரா் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா்.
அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா்.
அதற்கு அவன்,"எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.
" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?"
"மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீா்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"
"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..
அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.
நாம் வழிபடவும்,வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவா் வேண்டும்.
எனவே தான்
"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"
என முன்னோா்கள் சொல்லியிருக்கிறாா்கள்.!

No comments:
Post a Comment