Tuesday 12 September 2023

மகரிஷி அவர்களுடன்............6


2002 ம் ஆண்டு வாக்கில் பெல் மன்றத்தில்  பிரம்மஞானப் பயிற்சி பெற்றவர்கள் ஆயிரத்திற்கும் மேலாகவும் அருள்நிதி பயிற்சி பெற்றவர்கள்  750க்கும்  மேலாகவும் இருந்தனர். இவர்களை மனவளக்கலையில் வாழ தினந்தோறும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க என்ன செய்யலாம் என்று வெகுவாக யோசித்தோம். இவர்களில் கிட்டத்தட்ட  70% பெல் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெறும் நிலையில் இருந்தனர். ஓய்வு பெற்றபிறகு சொந்த ஊரில் அங்குள்ள அறக்கட்டளைக்கு தேர்ந்த தொண்டராக இவர்களை உருவாக்கவேண்டும் என்ற சிந்தனையில் உதித்ததுதான் மனவளக்கலை பயிற்சி  அட்டவணை.

மாதத்திற்கு ஒரு தாள் என ஆண்டுக்கு பன்னிரண்டு தாள்கள் கொண்ட  ஓர் அழகான கோப்பினை பிரம்மஞானிகளுக்கும், அருள்நிதியர்களுக்கும் தந்து ஒவ்வொரு மாதமும் அட்டவணையை பூர்த்தி செய்து மன்றத்தில் தர ஏற்பாடு செய்தோம். நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த கோப்பினைப் பெற்று மாதந்தோறும் தங்கள் பயிற்சி விவரங்களை மன்றத்தில்  சேர்ப்பித்தனர்.

மகரிஷி அவர்களின் ஒப்புதல் பெறாமல் செய்துவிட்டோமே என்ற தவிப்பில் மகரிஷி அவர்களை ஆழியாறில் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும், ஒப்புதலையும் கேட்டபோது  மூன்று  விஷயங்களை மாற்றம் செய்ய சொன்னார்கள்.

1.. உடற்பயிற்சி செய்முறையில் நடுவில் அக்கு பிரஷர் செய்தபிறகு மசாஜ் செய்ய சில பேராசிரியர்கள் வலியுறுத்தியதால் அது சில ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. அதுபோலவே நாங்களும் அட்டவணையில் குறித்திருந்தோம். அதனை பழையபடி மசாஜூக்குப் பிறகு அக்கு பிரஷர் என மாற்றச் சொல்லி " இப்படி செய்தால்தான் நன்மை அதிகம். முதலில் மசாஜ் என மாற்றுங்கள் " என அறிவுறுத்தினார். இந்த மாற்றம் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டு பழையபடியே செயல் படுத்தப்பட்டது. 

2. அடுத்த திருத்தம் ஜீவகாந்த பயிற்சி பற்றி - எங்கள் அட்டவணையில் தினமும் காலை ஜீவகாந்த பயிற்சி என குறிப்பிட்டிருந்தோம். அதனை வாரம் இரு முறை என மாற்றச் சொன்னார்கள். விளக்கம் கேட்டதற்கு மகரிஷி அவர்கள் " நான் இதில் நிறைய ஆராய்ந்துள்ளேன். தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து பார்த்த அனுபவத்தில் எல்லா பயிற்சிகளிலும் அளவு/முறை அவசியம் என கண்டுகொண்டேன். இதையும் வாரம் இரு முறை என மாற்றிவிடுங்கள் " என சொல்லி எங்கள் இந்த முயற்சிக்கு பலவாறாகப் பாராட்டி இந்த அட்டவணையை தலைவருக்கும் மற்றும் எல்லா அறக்கட்டளைக்கும் அனுப்பப் சொன்னார்கள்.

3. "மாதத்தின் எல்லா நாட்களும் மனவளக்களைப் பயிற்சிகள் செய்ய வேண்டுமென வற்புறுத்தாதீர்கள். 25 நாட்கள் செய்தால் போதும். ஜீவகாந்தம் மாதத்திற்கு 6 நாட்கள் செய்தால் போதும். மௌனம் ஒரு நாள் என திருத்தம் செய்யங்கள்" எனவும் அறிவுறுத்தினார்கள்.

ஏற்கனவே  இரண்டாயிரம் தாள்கள் கலரில் அச்சிடப்பட்டு பல அன்பர்களுக்கு கோப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் திரும்பப் பெற்று மூன்று ரப்பர் ஸ்டாம்ப்கள் தயார் செய்து மகரிஷி சொன்னமாதிரி அத்தனை தாள்களிலும் திருத்தம் செய்து அன்பர்களுக்கு கொடுத்தோம். ரப்பர் ஸ்டாம்ப் மூலம் திருத்தப்பட்ட அட்டவணையினைக் கீழே காணலாம்.


திருச்சி திரும்பிய பிறகு அருட்தந்தை அவர்களின் அறிவுரைபடி புதிதாக மூன்றாயிரம் பயிற்சி அட்டவணை அச்சிடப்பட்டு தலைவர், பதிப்பகம், பேராசிரிய பெருமக்கள் மற்றும் அனைத்து அறக்கட்டளைகளுக்கும் கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த அட்டவணை விஷன் பட்டய, பட்டப் படிப்பு பாடப் புத்தகங்களில் இடம் பெற்றது எங்களுக்கு மேலும் உற்சாகத்தினைத் தந்தது.

அருட்தந்தை அவர்களின் அறிவுரைப்படி திருத்தப்பட்ட அட்டவணை கீழே 



While publishing this post no of views of this blog - 260.561K

No comments:

Post a Comment