Wednesday 18 October 2023

NAVARATHIRI


தேவி பாகவதம் 9-வது காண்டத்தில், மகாலட்சுமியின் தோற்றம் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள் ளது. ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினாள். அவரது இடபாகத்தில் இருந்து தோன்றியவள் ரமா தேவி; வல பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி.


‘ரமா’ என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகாலட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் ஒப்படைத்தாள். மகாலட்சுமி அப்போது செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்னி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது.

மகாலட்சுமி பாற்கடலில் தோன்றிய திருக்கதையை ஸ்ரீமத்பாகவதம் சொல்கிறது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. அவற்றுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள்.

பின்னர் பரம்பொருளின் அறிவுரைப்படி பாற்கடல் கடையபபட்டது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண் யத்துடன் மகாலட்சுமி தோன்றி, யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள் என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

பிரம்ம வைவர்த்த புராணத்தில் மகாலட்சுமியின் பெருமை விளக்கப்படுகிறது. `எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் கருணை மிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள்’ என்பது பிரம்மதேவனின் திருவாக்கு.

அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிவபக்தரும்கூட! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். நவநிதிகளைப் பரிபாலிப்பவர் குபேரன். மகா லட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார்.

இங்ஙனம் மகாலட்சுமியின் மகிமையைச் சொல்லும் புராணங்கள், அஷ்டலட்சுமியாக அருளும் அவளின் பல்வேறு பரிமாணங்கள், அவள் வழங்கும் செல்வங்கள் குறித்தும் விவரிக்கின்றன. ஆம், திருமகள் பணம் பொன் பொருள்களை மட்டுமல்ல, மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.

அவ்வகையில், எந்த லட்சுமியை வழிபட்டால் என்ன வரம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா?

ஆதி லட்சுமி: இவளுக்கு ‘ரமணா’ என்ற பெயரும் உண்டு. இந்த தேவியை வழிபட்டால், மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தருவாள்.

தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்கும் அன்னை இவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.

தன லட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது ‘தனம்’ எனப்படுகிறது. அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.

சந்தான லட்சுமி: நல்ல குடும்பமும் நல்ல குழந்தைகளும் ஒருவனது வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள். எத்தனை பொருட்செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்து, குழந்தைச் செல்வத்தை அருளுபவள் இவள்.

கஜ லட்சுமி: லட்சுமிக்கு ‘க்ஷீராப்தி தனயை’ என்ற பெயருண்டு. பாற்கடலில் தோன்றியவள் என்பது இதன் பொருள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானை கள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலயங்களில் கர்ப்பக்கிரஹ வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் வைக்கப்படுவதைக் காணலாம். மனத் தூய்மையையும், மனஅமைதியையும் தருபவள் இவள்.

வித்யா லட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யா லட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே!

விஜய லட்சுமி: கடுமையான முயற்சியும் உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள் புரிபவள் விஜயலட்சுமி.

தைரிய லட்சுமி: கல்வியும் செல்வமும் இருந்துவிட்டால் போதுமா? தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல் பலமும், வைராக்யமும், தைரியமும் அவசியம் அல்லவா? அதைத் தருள்கின்றவள் தைரியலட்சுமி.

No comments:

Post a Comment