Friday 28 October 2022

மந்திரங்கள் ஏன் பலிப்பதில்லை?

ஒரு அரசவைக்கு சித்த முனிவர் ஒருவர் பாடி பொருள் பெற வந்திருந்தார். அவர் எந்த மந்திரங்களை கூறினாலும் அது அப்படியே பலித்தாகும்.

அவரிடம் அரசர் எனக்கும் சில மந்திரங்களை சொல்லித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த முனிவர் மறுத்துவிட்டார். அரசர் மேலும் மேலும் கட்டாயப்படுத்தவே முனிவரோ அரசருக்கு சில மந்திரங்களை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

மீண்டும் சில காலம் கழித்து அந்த முனிவர் அரசவைக்கு வந்தார். அப்போது அரசர், ‘தாங்கள் கற்று கொடுத்த மந்திரம் ஏதும் பலிக்கவில்லை. என்னை நன்கு ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று முனிவரிடம் கூறினார். உடனே அந்த முனிவரோ அரசரின் தலையை துண்டியுங்கள் என அங்கிருந்த காவலாளிகளிடம் கூறினார். அனைவரும் வியப்புக்குள்ளாகினர்.

அரசர், ‘என் தலையைவா துண்டிக்க சொன்னீர்’ என்று கோபத்துடன் முனிவரை தூக்கி சிறையில் அடையுங்கள் என்றார். உடனே காவலாளிகள் முனிவரை சிறையில் அடைக்க முயன்றனர்.

அப்போது முனிவர், ‘அரசே! நான் கூறிய போது அசையாமல் நின்ற காவலர்கள் நீர் சொன்னதும் என்னை சிறையில் அடைக்க முற்பட்டனர். இப்போது புரிகின்றதா யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அந்த சொற்களை கூறவேண்டியவர்கள் கூறினால் தான் அது பலித்தாகும்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment